‘ஒரு 4 டீம் மட்டும்தான் எப்பவுமே டாப்ல இருக்காங்க’!.. ஐபிஎல்ல அந்த ரூல்ஸை மாத்தியே ஆகணும்.. பிசிசிஐக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஆகாஷ் சோப்ரா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது தொடர்பாக விதிகளை மாற்ற வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட ஐபிஎல் (IPL 2021) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 51 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் சென்னை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட மூன்று அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. வரும் அக்டோபர் 8-ம் தேதியுடன் லீக் சுற்றுகள் முடிவடைகின்றன. இதனை அடுத்து 10-ம் தேதி முதல் ப்ளே ஆஃப் சுற்றுகள் தொடங்குகின்றன.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறையை கொண்டு வர வேண்டும் என கருத்து தெரித்துள்ளார். அதில், ‘ஐபிஎல் தொடரில் 4 அணிகள் மட்டுமே எப்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் அடுத்த ஆண்டு மேலும் 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளன. இதனால் மற்ற அணிகள் பெரிதும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய 4 அணிகள் மட்டுமே புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளன. ஆனால் மற்ற அணிகள் போராடுவதைப் பார்த்தால், எங்கு பிரச்சனை உள்ளது என்பது தெரிந்துவிடும். தற்போது ஒவ்வொரு அணிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுகின்றனர்.

அதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து 5 வெளிநாட்டு வீரர்களை அனுமதிப்பது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரீசலிக்க வேண்டும். 5 வெளிநாட்டு வீரர்களுடன் விளையாட விருப்பம் இல்லாத அணிகள், 4 வீரர்களுடனேயே விளையாடலாம். இதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை’ என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

வரும் 2022-ம் ஆண்டு ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இதில் புதிதாக 2 அணிகள் இணைக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதனால் ஒவ்வொரு அணியிலும் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தோனியை அணியில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்