"வேணும்னா பாருங்க.. இந்த 'டீம்' தான் 'டெஸ்ட்' சாம்பியன்ஷிப் ஜெயிக்க போறாங்க.." காரணத்துடன் விளக்கிய 'முன்னாள்' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

டெஸ்ட் போட்டிகளை எடுத்துக் கொண்டால், இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளும் அசுர பலத்துடன் விளங்குகிறது. இது முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும், இந்த போட்டியை அதிகமாக எதிர்நோக்கி காத்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், இரு அணிகளிலும் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருப்பதால், நிச்சயம் இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொள்ளும் என்பதலில் எந்தவித சந்தேகமுமில்லை.

அதே வேளையில், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் எந்த அணி கோப்பையைத் தட்டிச் செல்லும் என்பது பற்றியும், தங்களது கணிப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது பற்றி, தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

'இந்த போட்டியில், நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும் என நான் கருதுகிறேன். இதற்காக, இந்திய அணியை எளிதில் வீழ்த்தி விட முடியும் என அர்த்தமில்லை. டெஸ்ட் வரிசையில், நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்தில இருந்தாலும், போட்டி நடைபெறும் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தை கருத்தில் கொண்டால், இது போன்ற ஆடுகளத்தில், அவர்கள் இந்திய அணியை விட சிறப்பாக ஆடுவார்கள் என்றே தோன்றுகிறது.

அது மட்டுமில்லாமல், இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகு தான், இந்திய அணியை சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது. இது நிச்சயம் அவர்களுக்கு இன்னும் பலம் சேர்க்கும்.


ஒரு இந்தியனாக நம் அனைவரின் மனதிலும், இந்திய அணி எளிதாக வென்று விடும் என்றே நினைப்போம். ஆனால், நியூசிலாந்து அணி அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுக் கொடுக்காது என நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரையில், நியூசிலாந்து அணி வெற்றி பெற 55 சதவீத வாய்ப்புகளும், இந்திய அணி வெற்றி பெற 45 சதவீத வாய்ப்புகளும் உள்ளது' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்