நானே ‘39 வயசு’ வரை விளையாடுனேன்.. அடுத்த சீசன்ல ‘இதுதான்’ நடக்கப் போகுது.. அடிச்சு சொன்ன ‘முன்னாள்’ சிஎஸ்கே வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியில் உள்ள மூத்த வீரர்கள் மற்றும் கேப்டன் தோனி குறித்து சென்னை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த வருட ஐபிஎல் சீசனின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறாமல் வெளியேறியது. இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் நேற்று நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பெற்ற த்ரில் வெற்றி ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. இந்த வருடம் சென்னை அணிக்கு சோதனையாகவே அமைந்தது. விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் எளிதாக வெற்றி பெறவேண்டிய சூழ்நிலை இருந்தும் அதனை கோட்டை விட்டது.

இதனால் சிஎஸ்கேவில் வயதான வீரர்களே அதிகமாக உள்ளனர். இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என பலரும் விமர்சனம் செய்தனர். இதனை அடுத்து சில போட்டிகளில் இளம்வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அப்போட்டிகளில் அவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இதனால் சிஎஸ்கேவில் இளம்வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என தோனி கூறினார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் இளம்வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். தற்போது நடந்து முடிந்த ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றது. அதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட்டின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவில் உள்ள வயதான வீரர்களுக்கு பதிலாக இளம்வீரர்களை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான ஆஷிஸ் நெஹ்ரா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். ‘வரும் 2021-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என நினைக்கிறேன்.

தோனி மிகவும் ஸ்மார்ட்டான வீரர். அடுத்த ஆண்டு இன்னும் வலிமையோடு வந்து சாதித்துக் காட்டுவார். தோனி மனதளவில் மிகவும் வலிமையான வீரர். அவருக்கு அணியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது நன்றாக தெரியும். அணியை நிர்வகிப்பது தோனிக்கு பெரிய பணியாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் தகுதி பெறாவிட்டால்தான் அது உங்களைப் பாதிக்கும். இது முதல் முறைதானே. அடுத்த ஆண்டு இதே அணியோடு வந்து தோனி சாதித்துக் காட்டுவார்.

கிரிக்கெட்டில் வயது என்பது பிரச்சினையில்லை. 30 முதல் 35 வயது என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.  ஐபிஎல் தொடரில் நான் 39 வயது வரை விளையாடினேன். நான் ஒரு வேகப்பந்துவீச்சாளர். என்னால் 39 வயது வரை விளையாட முடிந்தது. இன்னும் கூட நீண்டகாலம் விளையாடி இருக்க முடியும்.

அதனால் சிஎஸ்கே அணியில் அடுத்த ஆண்டு ஷேன் வாட்சன் கூட இருப்பார் என நினைக்கிறேன். அணியில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏதும் சிஎஸ்கே நிர்வாகம் செய்யாது என்று நம்புகிறேன். நான் பார்த்தவரை, சிஎஸ்கே அணி வீரர்கள் 30 முதல் 35 வயதுள்ளவர்கள் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், அவர்களால் என்ன செய்ய முடிகிறது என்பதைதான் பார்க்க வேண்டும். இந்த ஒரு சீசனை வைத்து அவர்களை குறைத்து எடைபோட முடியாது. அடுத்த சீசனில் இதே பழைய சிஎஸ்கே அணி திரும்ப வரும் என நினைக்கிறேன்’ என ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்