'பசங்க எங்கள கை கழுவி விட்டாங்க'...'கதறி அழுத வயதான தம்பதி'... 'நெகிழ வைத்த நெட்டிசன்கள்'... சொமோட்டோ கொடுத்த சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மனிதம் என்பது சாகவில்லை, உயிர்ப்புடன் தான் இருக்கிறது என நெட்டிசன்கள் நிரூபித்த நிலையில், வயதான தம்பதிக்கு சொமோட்டோ நிறுவனம் தனது பங்கிற்கு உதவி இருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த கண்டா பிரசாத் என்ற முதியவர் தனது மனைவியுடன் கடந்த 30 ஆண்டுகளாக டெல்லி மால்வியா நகரில் ‘பாபா தாபா’ என்ற பெயரில் சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார். அவரும் அவரது மனைவியும் தாங்கள் வீட்டில் சமைத்த உணவை, எடுத்து வந்து உணவகத்தில் ஒரு பிளேட் 30 முதல் 50 வரை ரூபாய் வரை என்று குறைவான விலையில் விற்று வந்தனர். மனதிற்கு நிம்மதியான வாழ்க்கையை இருவரும் நடத்தி வந்த நிலையில், கொரோனா ரூபத்தில் அவர்களுக்கு பிரச்சனை எழுந்தது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்களின் வியாபாரமும் அடியோடு சரிந்தது.

ஊரடங்கு நேரத்தில் இருவரும் மிகுந்த சிக்கலுக்கு ஆளான நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா பயம் காரணமாகப் பலரும் உணவகத்திற்கு வந்து சாப்பிட அச்சப்பட்டார்கள். இதனால், தொடர்ச்சியாக வருமானம் இல்லாமல் வறுமையின் கோரப்பிடிக்குத் தள்ளப்பட்டனர். உணவகத்தில் வரும் வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள இந்த முதிய தம்பதிகள் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் என்பது கூடுதல் பெருஞ்சோகம்.

இதனிடையே சமைத்து வைத்த உணவு எல்லாம் அப்படியே இருக்கிறது. யாரும் சாப்பிட வரவில்லையே என அந்த முதியவர் கதறி அழுதார். அப்போது அங்கு சாப்பிட வந்த நபர் ஒருவர் அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த பலரும் நெகிழ்ந்து போன நிலையில், அந்த வீடியோ வைரலானது. இதற்கிடையே அந்த வீடியோவை கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகை ஸ்வரா பாஸ்கர், சோனம் கபூர் உள்ளிட்ட பலர்  தங்கள் பக்கங்களில் பகிர்ந்து டெல்லி மால்வியா நகரில் உள்ள பகுதி மக்களை அந்த முதியவரின் தாபாவிற்குச் சென்று சாப்பிடும்படி கேட்டுக்கொண்டனர்.

இதைப் பார்த்த பலரும் நேற்று முதிய தம்பதிகளின் தாபாவில் உணவருந்தக் குவிந்து விட்டார்கள். நெட்டிசன்கள் நினைத்தால் ஒருவரின் வாழ்க்கையில் எந்த அளவிற்கு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதற்கு உதாரணமாக மாறிப்போயுள்ளது இந்த சம்பவம். இது ஒருபுறம் இருக்க உணவு டெலிவரி செய்யும் சொமோட்டோ நிறுவனம், “பாபா தாபா இப்போது சொமோட்டோவில் சேர்க்கப்பட்டுள்ளது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், ''எங்கள் பணியாளர்கள் முதிய தம்பதியினருடன் இணைந்து ஆர்டர் செய்பவர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகிறார்கள். இதனை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்த இணையத்தின் நல்லவர்களுக்கு நன்றி. உங்களுக்கு இதேபோன்று சிறிய உணவகங்கள் தெரிந்தால், அவர்களின் விவரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் எங்களால் முடிந்த உதவியைச் செய்வோம்'' என்று உறுதியளிக்கிறோம்” என்று  அறிவித்திருக்கிறது.

வயதான காலத்தில் அவர்களைக் குழந்தைகளைப் போலப் பார்த்துக் கொள்ள வேண்டிய பிள்ளைகளே இருவரையும் அனாதையாக விட்ட நிலையில், உழைப்பு என்று ஒன்று இருந்தால் யாரையும் எதிர்பார்த்து நிற்க வேண்டாம் என நிரூபித்து பலருக்கும் உதாரணமாக மாறியுள்ளார்கள் இந்த வயதான தம்பதியர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்