'அது' நடக்குற வரைக்கும்... 'என் வேலை இது தான்...' 'சாதிக்க துடிக்கும் பெண்...' - விஷயத்தை கேள்விப்பட்ட உடனே 'யூடியூபர்' செய்த நெகிழ வைக்கும் காரியம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி பயிலும் இளம்பெண் ஒருவர் படித்து கொண்டு குடும்ப கஷ்டத்திற்காக சொமாட்டோவில் உணவு டெலிவரி செய்து வருகிறார்.

தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டாவில் உள்ள பாலசமுத்திரத்தில் வசித்து வருபவர் ரச்சனா. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வரும் ரச்சனா, பகல் நேரங்களில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்.

சில நாட்களுக்கு முன் இணையத்தில் வைரலானவர் தான் இந்த ரச்சனா. தனது படிப்பு கட்டணங்களுக்காகவும், கூலி வேலை செய்யும் பெற்றோருக்கு உதவுவதற்காகவும் படிப்பு நேரம் முடிந்தவுடன் உணவு டெலிவரி செய்து வருகிறார்.

இதுகுறித்து கூறும் ரச்சனா, 'இதற்கு முன் நான் ஒரு பால் கடையில் வேலை செய்தேன், ஆனால் அதில் வந்த வருமானம் எனது படிப்பையும், பெற்றோரையும் சமமாக கையாள போதுமானதாக இல்லை. ஆனால் இப்போது செய்து வரும் இந்த டெலிவரி தொழிலில் வரும் வருமானம் எனது தேவைகளுக்கு போதுமானதாக உள்ளது.

அதோடு நானும் எனது பெற்றோருக்கு என்னால் முடிந்த அளவிற்கு பணம் அனுப்புகிறேன், மீதம் வரும் பணத்தை எனது படிப்பு செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கு பயன்படுத்துகிறேன்.

நான் தற்போது பயின்று வரும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கோர்ஸை முடித்த பிறகு , என் கையில் ஒரு வேலை இருக்கும், அதுவரை நான் என் பணியை தொடருவேன்' எனக் கூறியுள்ளார்.

ரச்சனாவின் நிலை அறிந்த, தெலங்கானாவில் பிரபல யூடியூபர்களில் ஒருவரான சீதாபல்மண்டியைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவர், ரச்சனாவுக்கு பத்தாயிரம் ரூபாய் பண உதவியும், தனது சொமாட்டோ வேலைக்காக ஒரு இரு சக்கர வாகனத்தையும் வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்