WTC final: ‘மழையால் அடுத்தடுத்து கைவிடப்படும் போட்டி’.. ரசிகர்களுக்கு ‘சிறப்பு’ சலுகை.. ஐசிசி அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டனில் தொடந்து மழை பெய்து வருவதால் ரசிகர்களுக்கு ஐசிசி ஒரு சலுகை வழங்கியுள்ளது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 4-வது நாளான நேற்றைய ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. ஏற்கனவே முதல் நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாள் ஆட்டத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக, குறைந்த ஓவர்களே வீசப்பட்டன. இதுவரை இரு அணிகளும் சேர்த்து மொத்தமாக 141 ஓவர்கள் மட்டுமே வீசியிருக்கின்றன.

கிரிக்கெட் ரசிகர்களிடேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த போட்டியானது மழையின் காரணமாக சுவராஸ்யமே இல்லாத ஒரு போட்டியாக மாறியுள்ளது. இரண்டு நாள்கள் மழையால் போட்டி தடைப்பட்டதால், ரிசர்வ்டே எனப்படும் 6-ம் நாள் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ரிசர்வ்டே ஆட்டத்திற்கான பார்வையாளர்களின் கட்டணத்தை ஐசிசி வெகுவாக குறைத்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 6-வது நாளுக்கான டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு வழக்கமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இங்கிலாந்து குடிமக்கள் மட்டுமே இப்போட்டியை நேரில் காண்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 6-வது நாளில் முதல் தரத்திற்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் 10, 296 ரூபாயாகவும், இரண்டாவது தரம் 7,722 ரூபாயாகவும், மூன்றாவது தரம் 5,148 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது’ என ஐசிசி தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இந்த மாதம் மழை பெய்யக்கூடும் என்று முன்னரே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அந்நாட்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை நடத்தும் முடிவை ஐசிசி எடுத்தது. தற்போது கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் ஐசிசியின் இந்த முடிவை சமூக வலைதளங்களில் விமர்ச்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்