டெல்லி தனிமை மையத்திலிருந்து ரயிலில் ‘தப்பிய’ பெண்ணுக்கு புதிய வகை கொரோனா.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் உள்ள தனிமைப்படுத்துதல் மையத்திலிருந்து தப்பிய ஆந்திர பெண்ணுக்கு புதிய கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண், இங்கிலாந்தில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்தார். விமான நிலையத்தில் அவரது சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்து தப்பிய அப்பெண், தன்னை வரவேற்க டெல்லி வந்திருந்த மகனுடன் டிசம்பர் 22-ம் தேதி ரயிலில் ராஜமுந்திரி தப்பிவிட்டார்.

இதனை அடுத்து அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தாயும், மகனும் டெல்லி-விசாகப்பட்டினம் விரைவு ரயிலில் ராஜமுந்திரி வந்தடைந்தனர். அப்போது ரயில் நிலையத்திலேயே அவர்களை பிடித்த சுகாதாரத் துறையினர், இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மகனுக்கு கொரோனா இல்லை என்று முடிவு வந்தது. இதனை அடுத்து தாயும், மகனும் அரசு தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அந்த பெண்ணுடன்  தொடர்பில் இருந்த யாருக்கும் தற்போது வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து இருவரையும் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அப்பெண்ணின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி, அவருக்கு அதிதீவிர கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அப்பெண்ணுக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை வரை ஆந்திர மாநிலத்துக்கு இங்கிலாந்திலிருந்து 1,216 போ் வந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவா்களில் 1,187 பேரின் விவரங்கள் தெரிய வந்ததை அடுத்து அவா்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 6 பேருக்கு புதிய வகை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவா்களின் மாதிரிகள் மீண்டும் சேகரிக்கப்பட்டு புனே மற்றும் பெங்களூரில் உள்ள பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்