‘அப்பா, இவுங்க எதையோ குடிக்கச் சொல்றாங்க’... 'மகள் செய்த ஃபோன்'... ‘பதறிய தந்தை’... 'இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேட்ட வரதட்சணையை கொடுக்காததால், 21 வயது இளம்பெண்ணின் வாயில் ஆசிட் ஊற்றி, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் சர்மா. இவரது, 21 வயதான மகள் யசோதா தேவிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பஹேதியைச் சேர்ந்த ஓம்கர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே கொடுத்த வரதட்சணை போதவில்லை என்று கூறி யசோதாவை, ஓம்கர் மற்றும் அவரது பெற்றோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அதோடு, வரதட்சணை வாங்கி வர சொல்லி யசோதாவை, அவரது தாய் வீட்டிற்கு விரட்டியடித்துள்ளனர்.

வரதட்சனை கொடுமை தாங்காமல் தாய் வீட்டிற்குச் சென்ற யசோதா, தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை தடுப்புசட்டத்தின் கீழ் காவல்துறையில் புகார் அளித்தார். பின்னர், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, யசோதாவை தன்னோடு அழைத்துச் செல்ல, ஓம்கார் ஒப்புக்கொண்டார். வீட்டிற்கு அழைத்துச்சென்ற சில நாட்களில் மீண்டும் யசோதாவை, ஓம்கார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த துவங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு யசோதாவின் சகோதரர் மனிஷ், 20,000 ரூபாய் செலவு செய்து அவர்களுக்கு இன்வெர்ட்டர் ஒன்றை வாங்கி கொடுத்து வந்துள்ளார். அதன் பின் மீண்டும் யசோதாவை துன்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை காலை, தந்தை கிரிஷ் சர்மாவிற்கு போன் செய்த யசோதா தேவி, தன் கணவர் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி எதையோ குடிக்க சொல்வதாக கூறி கதறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கிரிஷ் சர்மாவும், மனிஷும், காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, யசோதா தங்கியிருந்த பஹேதிக்கு விரைந்தனர். அங்கு சென்றபோது தரையில் மயங்கிய நிலையில், யசோதாவைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அங்கு காணவில்லை. இதனால் பதறிப்போன யசோதாவின் தந்தை, அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொடுசென்றனர். ஆனால், யசோதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால், நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு யசோதாவை தூக்கிச்சென்று அவசரப்பிரிவில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யசோதா மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட யசோதாவின் குடும்பம் கதறியழுதது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பஹேதி காவல்துறை அதிகாரி கிருஷ்ணா முராரி ‘அந்த பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் தலைமறைவானதால், இது வரதட்சணைக்காக நிகழ்த்தப்பட்ட கொலைதான் என்பது தெளிவாகத் தெரிகிறது. யசோதாவின் குடும்பத்தினரிடமிருந்து எழுத்துப்பூர்வமான புகார் பெற்றதும் ஓம்கார் குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

ACID, DOWRY, MURDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்