கருப்பு பூஞ்சையை விட ஆபத்தான ‘வெள்ளை பூஞ்சை’ இந்தியாவில் பரவல்.. இதுவரை 4 பேர் பாதிப்பு.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கருப்பு பூஞ்சையை விட ஆபத்தான வெள்ளை பூஞ்சை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கருப்பு பூஞ்சை தாக்கி வருகிறது. இது ராஜஸ்தான், பீகார், மகராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது. தற்போது தமிழகத்திலும் இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.

தமிழகத்தில் இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இது அறிவிக்கப்பட வேண்டிய நோய் என அவர் அறிவித்துள்ளார். அதனால் தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டால், உடனே அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சர்க்கரை நோயாளிகள் ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த கருப்பு பூஞ்சை தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான தலைவலி, காய்ச்சல், கண் சிவத்தல், ரத்த வாந்தி, பார்வை குறைபாடு, மூக்கடைப்பு, மூக்கில் இருந்து ரத்த கலந்த நீர் வடிதல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பீகாரின் பாட்னா மருத்துவமனையில் வெள்ளை பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த அம்மருத்துவமனையின் மைக்ரோபயோலஜி துறை தலைவர் டாக்டர் எஸ்.என்.சிங், ‘பாட்னா மருத்துவமனையில் இதுவரை 4 பேருக்கு வெள்ளை பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த நான்கு பேரும் பூஞ்சை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. ஆனால் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளை பூஞ்சால் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெள்ளை பூஞ்சை, நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தவிர தோல், நகங்கள், வாயின் உட்புற பகுதி, வயிறு, குடல், இனப்பெருக்க உறுப்புகள், மூளை உள்ளிட்ட பாகங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்