'ஒரே நாளில் வைரலான இளைஞர்'... 'பிரதமரின் காதில் சொன்னது என்ன?'... இளைஞரின் பேராசையை கேட்டு ஆச்சரியமடைந்த பிரதமர் மோடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முஸ்லிம் இளைஞர் மோடியின் காதில் என்ன சொன்னார் என்பது சமூகவலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக மாறியது.

தமிழகச் சட்டமன்ற தேர்தலைப் போன்றே மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலும் இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என பாஜக தலைவர்கள் பலரும் சூறாவளி பயணம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி சோனார்பூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும்போது, முஸ்லிம் இளைஞர் ஒருவர், பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது அவரது காதில் இளைஞர் எதையோ கூற, பிரதமர் மோடி இளைஞரின் தோளை அரவணைத்து உன்னிப்பாகக் கேட்டார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. யார் அந்த இளைஞர், அவர் மோடியின் காதில் என்ன சொன்னார் என்பது குறித்த விவாதம் சமூகவலைத்தளங்களில் பரவலானது.

இதற்கிடையே புகைப்படம் தொடர்பாக ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி, எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்தார். "அந்த இளைஞர், முஸ்லிம் கிடையாது. மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக நடத்திய நாடகம்" என்றார். இது ஒருபுறம் இருக்க முன்னணி ஊடகங்களின் நிருபர்கள், விசாரணை நடத்தி அந்த இளைஞரைத் தேடிக் கண்டுபிடித்தனர்.

அந்த இளைஞர் கொல்கத்தாவின் மீடியாபுரூஸ் பகுதியைச் சேர்ந்த ஜுல்பிகர் அலி என்பது தெரிய வந்தது. இதையடுத்து நீங்கள் பிரதமரிடம் என்ன பேசுனீர்கள் என்பதை நிருபர்கள் அந்த இளைஞரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜுல்பிகர் அலி,  ''ஏப்ரல் 2-ம் தேதி சோனார்பூரில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 40 விநாடிகள் மட்டுமே பிரதமருடன் பேசினேன். இது 40 ஆண்டுகள் வரை என் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருக்கும்.

எனது பெயரைப் பிரதமர் கேட்டறிந்தார். எனக்கு ஏதாவது வேண்டுமா என்று அன்போடு கேட்டார். எனக்கு எம்எல்ஏ சீட் வேண்டாம், கவுன்சிலர் சீட் கூட வேண்டாம் என பிரதமரிடம் கூறினேன். ஆனால் எனக்கு ஒரு பேராசை இருக்கிறது என்று பிரதமரிடம் கூறினேன். அவர் அது என்ன பேராசை என ஆச்சரியமாகக் கேட்டார். அது உங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் எனது பேராசை என்று கூறினேன். அவர் உடனடியாக புகைப்பட நிபுணரை அழைத்து புகைப்படம் எடுக்கச் செய்தார்'' என ஜுல்பிகர் அலி தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய ஜுல்பிகர் அலி, நான் முஸ்லிம். கடந்த 2014-ம்ஆண்டு முதல் பாஜகவில் உள்ளேன். தற்போது தெற்கு கொல்கத்தா மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவராகப் பதவி வகிக்கிறேன். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகச் சேவையாற்ற விரும்பினேன். அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்