VIDEO: 'பார்க்' பண்ணிட்டு போன இடத்துல இப்போ 'கார்' இல்ல...! 'வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...' - என்ன நடந்தது...?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பையில் பார்க் செய்யப்பட்ட கார் ஒன்று நிலத்திற்குள் செல்லும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை மாநகர், கட்கோபர் மேற்கு பகுதியில் காமா பாதையில் அமைந்துள்ள ராம் நிவாஸ் பகுதியின் கார் பார்க்கிங் பகுதியில் எப்போதும் போல பல கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று (13-06-2021) பார்க்கிங் பகுதியில் நின்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென நிலத்திற்குள் சென்றுள்ளது.

இந்த சம்பவம் நடந்த பார்க்கிங் ஏரியாவில் பல வருடங்களுக்கு முன் கிணறு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவ்வளாகத்தில் குடியிருப்பவர்கள் அதை ஒரு பார்க்கிங் இடமாக மாற்றுவதற்காக சிமென்ட் கலவைக் கொண்டு கிணற்றின் பாதிப் பகுதியை மூடியுள்ளனர். ஆனால் சில நாட்களாக மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, மெல்ல நீரில் இழுக்கப்பட்டு கார் நிலத்துக்குள் சென்றது.

அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை. கட்கோபர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த மக்கள் கூறியதாவது, 'அந்த இடத்தில் ஒரு கிணறு இருந்தது. சிலர் அதை ஒரு கான்கிரீட் ஸ்லாப் கொண்டு மூடி, அதன் மேல் கார்களை நிறுத்தத் தொடங்கினர். மழையைத் தொடர்ந்து நிலச்சரிவு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.' என கூறியுள்ளனர்.

மேலும், பிரஹன் மாநகராட்சி இது குறித்து தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில், 'இந்த சம்பவம் குறித்த தகவல்களைப் பெற்ற பின்னர், நீர் பம்பிங் பணிகள் சம்பந்தப்பட்ட துறை நிவாரணப் பணிகளை நடத்தும்' என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்