மதுவுக்கு அடிமையாகி... ஆயுள் தண்டனை பெற்று... சிறைவாசம் அனுபவிக்கும் குரங்கு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திரப்பிரதேசத்தில் மதுப் பழக்கத்துக்கு அடிமையான குரங்கு ஒன்றுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் வினோத சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மதுவுக்கு அடிமையான குரங்கு இதுவரை 250 பேருக்கும் மேலே கடித்துக் குதறியிருக்கிறது. ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதனால் இப்போது கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டுக் கிடக்கிறது குரங்கு.

உத்திரப்பிரதேசம், மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார். அந்தக் குரங்குக்கு கலுவா என்றும் பெயர் சூட்டியுள்ளார். அன்புடன் அந்தக் குரங்கை வளர்த்து வந்தவர் தினமும் தான் மது குடிக்கும் போது அந்தக் குரங்குக்கும் ஊற்றிக் கொடுத்துள்ளார். குரங்கும் மதுவுக்கு அடிமையானது. மது இல்லாவிட்டால் அமைதியாக இருக்கமுடியாது என்ற நிலைக்குக் குரங்கு தள்ளப்பட்ட போது, குரங்கின் உரிமையாளர் எதிர்பாராத விதத்தில் இறந்துவிட்டார். அதன் பிறகு குரங்கின் நிலைமைதான் பரிதாபமாகிப்போனது.

மது கிடைக்காமல் வெறிகொண்ட குரங்கு போவோர் வருவோரைக் கடிக்கத் தொடங்கியது. வெறிகொண்ட குரங்கால் கடிபட்டவர்கள் மட்டும் 250 பேருக்கு மேல் இருக்கும் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள். குரங்கு கடித்ததில் ஒருவர் பலியாகியிருக்கிறார்.  மிர்சாபூர் மக்கள் இந்தக் குரங்கைப் பார்த்து அச்சப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. நிலைமை விபரீதமானதும் வனத்துறையினர் விரைந்து வந்து கலுவா குரங்கைப் பிடித்து அடைத்தனர்.  தற்போது உத்திரப்பிரதேசம், கான்பூர் வன விலங்குகள் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது குரங்கு...

இந்தக் குரங்கைப் பராமரிக்கும் கால்நடை மருத்துவர், "குரங்கை ஒரு அறையில் வைத்துப் பராமரித்தோம். பிறகு தனிக் கூண்டில் அடைத்தோம். எப்போதுமே மிகுந்த வெறியோடு தான் இந்தக் குரங்கு இருக்கிறது. அதன் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. மூன்று ஆண்டுகளாக மருத்துவம் அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. மூன்று ஆண்டுகளாக உணவு கொடுத்துக் கவனித்துக் கொண்டிருப்பவரிடம் கூட இந்தக் குரங்கு அன்பாகப் பழக்கவில்லை. தற்போது கலுவா குரங்குக்கு ஆறு வயதாகிறது. தற்போதுள்ள சூழலில் குரங்கை வெளியே விட முடியாது. அப்படி விட்டால் அனைவரையும் கடித்துக் குதறிவிடும். அதனால், இனி இந்தக் குரங்கைத் தனிக் கூண்டில் அடைத்துவைத்துப் பராமரிக்க முடிவெடுத்துள்ளோம். அதன் எதிர்காலம் இனி கூண்டுக்குள் தான்" என்று கூறியிருக்கிறார்.

வனங்களில் சுற்றித் திறந்த குரங்கைப் பிடித்து மதுவுக்கு அடிமையாக்கிய மனிதன் போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால், குரங்குதான் பாவம். தற்போது மது கிடைக்காததால் வெறி பிடித்து கம்பிகளுக்குள் துயரமான நாட்களைக் கடந்துகொண்டிருக்கிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்