‘இவங்க தான் ரியல் ஹீரோக்கள்’... ‘ஊரடங்கு’ நேரத்தில் ‘கர்ப்பிணி’ பெண்ணின் ‘ஆசையை’ நிறைவேற்றிய காவலர்கள்.. ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ’ வைக்கும் சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கின்போது கணவர் ஊருக்கு வர உதவிய காவலருடைய பெயரை பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு சூட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசிப்பவர் தமன்னா கான் (25). பிரசவத்தின்போது தன்னுடைய கணவருடன் இருக்க வேண்டுமென தமன்னா ஆசைப்பட, ஊரடங்கு காரணமாக அவருடைய கணவரோ நொய்டாவில் சிக்கியிருந்துள்ளார். இதையடுத்து தமன்னா தன் நிலை குறித்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூக வலைதளம் மூலமாக பரேலியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஷைலேஷ் பாண்டேவிடம் உதவி கேட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சைலேஷ் பாண்டே, “எனக்கு சமூக வலைதளம் மூலமாக செய்தி கிடைத்ததும் நாங்கள் அந்தப் பெண்ணை அணுகினோம். பின்னர் நொய்டாவிலிருந்த அவருடைய கணவர் அனீஸை அழைத்து வர உதவுமாறு நொய்டா காவலர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். அவர்கள் உதவியுடன் ஒரு காரை ஏற்பாடு செய்யப்பட்டு அந்தப் பெண்ணின் கணவர் சரியான நேரத்தில் மருத்துவமனையை வந்தடைந்தார். அதன்பிறகு வியாழக்கிழமை அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது” எனக் கூறியுள்ளார். பரேலி காவலர்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து நொய்டா ஏடிசிபி ரன்விஜய் சிங் அந்தப் பெண்ணின் கணவர் சரியான நேரத்தில் பரேலியை அடைவதற்கு பெரிதும் உதவியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் தன்னுடைய குழந்தைக்கு முகமது ரன்விஜய் கான் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள தமன்னா கான், “ரன்விஜய் சார் எங்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். பல பொறுப்புகளுக்கு இடையிலும் அவர் தனிப்பட்ட முறையில் என்னுடைய கணவரைத் தேடிச் சென்று சந்தித்தார். மேலும் என்னுடைய கணவர் சரியான நேரத்தில் பரேலியை அடைவதையும் அவர் உறுதி செய்தார். சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு வீடியோவிற்கு இந்த அளவுக்கு உதவி கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை காவலர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். எங்களுடைய குழந்தைக்கு நாங்கள் முகமது ரன்விஜய் கான் எனப் பெயர் சூட்டியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

CORONAVIRUS, UTTARPRADESH, POLICE, BABY, LOCKDOWN, HUSBAND, WIFE, NAME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்