இந்தியாவின் ஆன்மாவை உலுக்கிய கோரம்!.. உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு 'நிர்பயா'!?.. அவசர அவசரமாக உடலை தகனம் செய்த காவல்துறை!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

செப்டம்பர் 14 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள ஒரு கிராமத்தில் நான்கு உய்ர் சாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண் நேற்று உயிரிழந்தார்.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், கடுமையான உடல்நல பாதிப்பால் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அந்த இளம்பெண் மரணமடைந்தார்.

அவரது மரணம் குறித்த செய்தி பரவியதால், டெல்லி மற்றும் ஹத்ராஸிலும் அரசியல்வாதிகள், விளையாட்டு மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் எதிர்ப்புகள் வெடித்தன. உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கோரி அனைவரும் குரல்கொடுத்தனர்.

நேற்று இரவு கடும் காவல்துறை பாதுகாப்புடன் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர். அதன்பின்னர் குடும்ப உறுப்பினர்கள் வருவதற்கு முன்னதாக ஹத்ராஸ்க்கு அந்த பெண்ணின் உடலை உத்தரபிரதேச காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.

"இறந்த என் சகோதரியின் உடலை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தகனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையிலிருந்து எனது தந்தை ஹத்ராஸை அடைந்ததும், அவரை உடனடியாக தகனத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்" என்று அந்தப் பெண்ணின் சகோதரர் தெரிவித்தார்.

அந்த பெண்ணின் உடல் நள்ளிரவில் சொந்த கிராமத்தை அடைந்து இன்று அதிகாலை 3 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. கிராமவாசிகள் அந்த பெண்ணின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகக் கூறினர். ஆனால், நிர்வாகம் விரைவாக தகனம் செய்ய அழுத்தம் கொடுத்தது. ஆம்புலன்ஸ் செல்வதற்கான பாதை தடைசெய்யப்பட்டு கடைசியில் கிராமத்தில் தகனம் நடந்தது.

"அவர்களுக்கு என்ன வேண்டும், இது என்ன மாதிரியான அரசியல். இறந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது போன்ற சீரற்ற அறிக்கைகளை அவர்கள் தருகிறார்கள். அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் இந்த வழக்கைத் முடிப்பதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள்" என்று உயிரிழந்த பெண்ணின் உறவினர் கூறினார்.

ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர், 'உடல் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள பூல்கரி கிராமத்தை அடைந்த பின்னர் வழக்கம் போல் குடும்பத்தின் விருப்பப்படி அனைத்து நடைமுறைகளும், தகனமும் நடந்தது. தற்போது கிராமத்தில் நிலைமை அமைதியாக உள்ளது' என கூறினார்.

ஆனால், ஊரில் அதிகளவிலான போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது என்று கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்