‘மணப்பெண் கிடைச்சாச்சு’!.. முடிவுக்கு வந்த 5 வருச காத்திருப்பு.. 2 அடி உயர நபருக்கு குவியும் வாழ்த்து..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனக்கு வாழ்க்கை துணை வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்த 2 அடி உயரமுள்ள நபருக்கு மணப்பெண் கிடைத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கைரானா பகுதியைச் சேர்ந்தவர் சுமார் 2 அடி உயரமுள்ள அசிம் மன்சூரி. இவர் அப்பகுதியில் தனது சகோதரருடன் இணைந்து துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நன்றாக சம்பாதித்தும், அசிம் மன்சூரிக்கு மணப்பெண் கிடைக்காமல் இருந்துள்ளது. அனைவரும் அவரது உயரத்தை காரணம் காட்டி தொடர்ந்து மறுத்து வந்துள்ளனர்.

மேலும் தனது உயரத்தால் நிறைய அவமானங்களை சந்தித்த அவர், பள்ளிப்படிப்பை 5-ம் வகுப்புடனே நிறுத்திவிட்டார். தற்போது 21 வயதாகும் அசிம் மன்சூரிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். ஆனால் கடந்த 5 வருடங்களாக அவருக்கு எந்தவொரு பெண்ணும் அமையவில்லை.

இதனால் மனம் நொந்துபோன அசிம் மன்சூரி, சமீபத்தில் ஷம்லி கோட்வாலி பெண்கள் காவல் நிலையத்தில், தனது திருமணத்துக்கு பெண் தேடி தர உதவுமாறு ஒரு வேண்டுகோள் வைத்தார். இந்த சம்பவம் அப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் பலனாக பலரும் அசிம் மன்சூரியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஹன்பூர் பகுதியைச் சேர்ந்த புஷ்ரா என்ற பெண்ணை அசிம் மன்சூரி திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து சமீபத்தில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். சமூக வலைதளங்களின் உதவியால் அசிம் மன்சூரிக்கு அவரது உயரமுள்ள மணப்பெண்ணே கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்