'விப்ரோ வேலை, கைநிறைய சம்பளம்'... 'அப்படியே டர்ன் பண்ணா ஐபிஎஸ்'... மகாராஷ்டிராவை கலக்கும் சேலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் மைந்தர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குடியரசு தினத்தை முன்னிட்டு வீரதீர செயல்கள் மற்றும் சிறப்பு சேவைகளுக்காக என நான்கு வகைகளில் குடியரசு தலைவர் விருதுகள் வருடந்தோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் காவல்துறை, மத்திய பாதுகாப்பு படைகள், மத்திய உளவுத்துறை, தேசிய பேரிடர் பாதுகாப்பு படை உள்ளிட்டோருக்கும் விருதுகள் அளிக்கப்படுகின்றன. இந்த வருடத்திற்கான குடியரசு தலைவர் காவல் பதக்கம் (பிபிஎம்ஜி), உயிர்த் தியாகம் செய்த துணை ஆய்வாளர்களான ஜார்கண்ட் மாநில காவல்துறையின் பனுவா ஓரன் மற்றும் சிஆர்பிஎப் படையின் மோஹன் லால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

காவல்துறை வீரதீரப் பதக்கங்கள் (பிஎம்ஜி) 205 பேருக்கும், பணியில் சிறந்த சேவைகளுக்கான குடியரசு தலைவர் பதக்கங்கள் (பிபிஎம்) 89 பேருக்கும், காவல்துறை பதக்கங்கள் (பிஎம்) 650 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலக் காவல்துறையினரில் 13 பேருக்கு பிஎம்ஜி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதே மாநிலக் காவல்துறையில், சிறந்த சேவைகளுக்கான பாதகங்களான பிபிஎம், 40 பேருக்கும் அளிக்கப்படவுள்ளன. இதில், பிஎம்ஜி பதக்கம் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளில் இரண்டு தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர். வீரதீரச் செயலின்போது ஆத்தூரைச் சேர்ந்த ஆர்.ராஜா மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த டாக்டர்.என்.ஹரி பாலாஜி ஆகியோர் கட்சிரோலி மாவட்டக் காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர்களாக இருந்தனர்.

இருவருமே 2018 இல் இருவேறு சம்பவங்களின் போது அப்பகுதியில் நக்சலைட்டுகள் வேட்டையை வெற்றிகரமாக மேற்கொண்டவர்கள். ராஜா நடத்திய என்கவுண்ட்டரில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். ஐபிஎஸ் அதிகாரி ஆவதற்கு முன் ராஜா, கோயம்பத்தூர் சிஐடி கல்லூரியில் இன்ஜினியரிங் பயின்று விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றியவர்.

ராஜா கடைசி இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த நிலையில், ஐபிஎஸ் கனவால் அந்த பணியை ராஜினாமா செய்தவர். இதனைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் பீட் மாவட்ட எஸ்.பியாக ராஜா பணியாற்றி வருகிறார்.

அதே போல மற்றொருவரான டாக்டர்.என்.ஹரி பாலாஜி, மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்ற நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆனார். அமராவதி மாவட்ட ஊரகப்பகுதியில் எஸ்.பியாக ஹரி பாலாஜி பணிபுரிந்து வருகிறார். இவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சிரோலி பகுதியில் முக்கிய நக்சலைட்டை என்கவுண்டர் செய்துள்ளார். 

குடியரசு தினத்திற்கு முன்பாக அறிவிக்கப்படும் இந்த பதக்கங்கள் பிறகு மாநில ஆளுநர்களால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்