இந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் ‘முதலிடம்’ பிடித்த நகரம்.. சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் அமைதியாக வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நகரங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு மற்றும் அமைதியாக வாழ்வதற்கு தகுதியான நகரங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டார். இந்த 2 பிரிவுகளிலும் 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகமான நகரங்கள், குறைவான நகரங்கள் என தனித்தனியாக பிரித்து அவற்றில் சிறந்த 10 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதில் வாழத் தகுதியான 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. புனே மற்றும் அகமதாபாத் நகரங்கள் 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்துள்ளன. சென்னை 4-வது இடத்தை பிடித்துள்ளது. சூரத், நவி மும்பை 5, 6-வது இடங்களை பிடித்துள்ளன. கோவை மாநகரம் 7-வது இடத்தில் உள்ளது. வதோதரா 8-வது, இந்தூர் 9-வது மற்றும் கிரேட்டர் மும்பை 10-வது இடத்தை பிடித்துள்ளன.

10 லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ள நகரங்களில் சிம்லா முதலிடத்தை பிடித்து உள்ளது. புவனேஸ்வர் 2-வது இடத்தையும், சில்வாசா 3-வது இடத்தையும், காக்கிநாடா 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. அடுத்ததாக சேலம் மற்றும் வேலூர் ஆகிய நகரங்கள் 5 மற்றும் 6-வது இடங்களையும், காந்திநகர், குருகிராம், தவான்கீர் ஆகிய நகரங்கள் அதற்கு அடுத்த இடங்களையும் பிடித்து உள்ளன. 10-வது இடத்தை திருச்சி பிடித்துள்ளது.

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சிறந்த நகராட்சிகள் பிரிவில் இந்தூர் முதலிடத்தை பிடித்துள்ளது. சூரத் (2), போபால் (3), பிம்ப்ரி சின்ஞ்வாடு (4), புனே (5), அகமதாபாத் (6), ரெய்ப்பூர் (7), கிரேட்டர் மும்பை (8), விசாகப்பட்டினம் (9), வதோதரா (10) ஆகிய நகராட்சிகள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இந்த பிரிவில் தமிழக மாநகராட்சிகள் எதுவுமே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகள் பிரிவில் புதுடெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. திருப்பதி 2-வது, காந்திநகர் 3-வது, கர்னால் 4-வது என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சேலம், திருப்பூர் மாநகராட்சிகள் 5 மற்றும் 6-வது இடங்களையும், பிலாஸ்பூர், உதய்ப்பூர், ஜான்சி ஆகியவை 7, 8 மற்றும் 9-வது இடங்களையும் பிடித்துள்ளன. திருநெல்வேலி மாநகராட்சி 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மொத்தம் 111 நகரங்களை ஆய்வு செய்யப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. வாழத் தகுதியான நகரங்கள் பட்டியல் அங்குள்ள வாழ்க்கைத்தரம், பொருளாதார திறன், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டும், சிறந்த நகராட்சிகள் பட்டியல் நிர்வாக ரீதியில் அவற்றின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்