‘இறந்துபோன மகளின் நினைவாக’... ‘10 ஆண்டுகளாக இடைவிடாமல்’... ‘தந்தை செய்யும் பாராட்டுக்குரிய செயல்’... ‘வியந்து பாராட்டும் நெட்டிசன்கள்’...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

எந்தவித மத பேதமின்றி ஏழைகளுக்காக, கடந்த 10 ஆண்டுகளாக தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் இலவச மதிய உணவு வழங்கி வரும் செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் ஆசிப் உசைன் சோஹைல்.  இவர் தனது மறைந்த தந்தை மற்றும் மகளின் நினைவாக சகினா என்ற அறக்கட்டளை ஒன்றை, கடந்த 2010-ம் ஆண்டு உருவாக்கியுள்ளார்.

இந்த அறக்கட்டளையின் மூலம் கடந்த 3 மாதங்களாக ஜூபிலி மலைப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இலவசமாக மதிய உணவு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறார். மேலும், நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் என்ற வகையில் உணவு மற்றும் உணவு சமைக்க தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து உதவி செய்கிறார்.

இதுபற்றி ஆசிப் கூறும்பொழுது, ‘பசிக்கு எந்த மதமும் இல்லை.  குப்பை தொட்டியில் இருந்து மக்கள் உணவை எடுத்து, சாப்பிடும் அவல நிலையை நாம் காண்கிறோம்.  மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக நாங்கள் பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் பிரசாரங்களை தொடங்கியுள்ளோம்.

நகரில் இலவச மதிய உணவு வழங்க பல்வேறு பகுதிகளிலும் அதற்காக சமையலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  ஊரடங்கில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும் பணியில் தன்னார்வலர்களாக 200 பணியாளர்கள் செயல்பட்டனர்.  இதனை மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்த திட்டமிட்டு வருகிறோம்’ என அவர் கூறியுள்ளார்.

இவரிடமிருந்து இலவச உணவை பெறும் ஏழைகள் பலரும், காசு இல்லாமல் தரமான உணவை வழங்கி வருவதாக வயிறார வாழ்த்துகின்றனர். மேலும், இவருக்கு நெட்டிசன்களும் பாராட்டுக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்திலும், எதிர்ப்பையும் மீறி, வெளிமாநில புலம்பெயர் தொழிளார்கள் மற்றும் அதரவற்றோர்களுக்கு, தன்னார்வலர்களின் மூலம் உணவை இவர் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்