'கல்யாணமாகி 15 நாள் ஆச்சு'... 'புதுமாப்பிள்ளை பற்றி சாப்ட்வேர் நிறுவனத்திற்கு வந்த புகார்'... 'வேலையை விட்டு தூக்கிய நிறுவனம்'... அதிர்ச்சி பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணமான 15 நாட்களில் மனைவியை தவிக்க விட்டு, ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்ற கணவரால் புது மனைவி சந்தித்த பிரச்சனைகளும், அதன் பிறகு மனைவி எடுத்த துணிச்சலான முடிவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், நக்ரிகல் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும், பிந்துஸ்ரீ என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, தனக்கு திருமணம் முடிந்த 15 நாட்களிலேயே, தனது பணியின் நிமித்தமாக சுரேஷ் ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றுள்ளார்.

அது மட்டுமில்லாமல், தனது மனைவி பிந்துஸ்ரீயை சீக்கிரமாக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக சுரேஷ் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதன் பின்னர் பிந்துஸ்ரீயை தொடர்பு கொள்ளவேயில்லை. இதனிடையே, பிந்துஸ்ரீயிடம் சுரேஷின் பெற்றோர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால், கடும் வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளான பிந்துஸ்ரீ, யாருக்கும் அஞ்சாமல் துணிவுடன் தனது கணவர் சுரேஷ் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் மீது போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதன் பின்னர், வெளிநாட்டில் இருக்கும் சுரேஷை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சியில் போலீசார் இறங்கினார்கள். அதன்படி, ஆஸ்திரேலியாவில் சுரேஷ் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு அனைத்து தகவல்களையும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சுரேஷை அவர் பணியில் இருந்து நீக்கியுள்ளார். இதன் பிறகு, ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய தூதரகம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சில தினங்களுக்கு முன்னர் சுரேஷ் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார். அவரை டெல்லி விமான நிலையத்தில் வைத்தே போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்