'இந்து முறைப்படிதான் அடக்கம் பண்றோம்...' கொரோனா வைரஸினால் இறந்த இந்து மக்களின் உடல்களை அடக்கம் செய்யும் இஸ்லாமியர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத்தின் சூரத் நகரில் கொரோனா வைரசால் இறந்த இந்து சமயத்தை சார்ந்த உடல்களையும் அவர்களது முறைப்படி தகனம் செய்து வரும் அப்துல் குழு அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றனர்.

உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு இந்தியாவில் மட்டும் 11,625 பாதிப்படைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 398 நெருங்கியுள்ளது. மேலும் 1,366 பேர் இவ்வைரஸிலிருந்து மீண்டுள்ளனர்.

சூரத் நகரில் சுமார் 30 வருடங்களாக ஆதரவற்ற மற்றும் அனாதை பிணங்களை தகனம் செய்யும் இந்தக் குழு அந்நகரில் கொரோனா வைரசால் பாதிப்படைந்து இறந்த 4 பேரை அடக்கம் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் இறப்பவர்களை தகனம் செய்ய ஒரு பிரத்யேக முறையினை கையாள்வது வழக்கம். இல்லையேல் இவ்வைரஸ் அவர்களுக்கும் பரவ அதிகளவில் வாய்ப்புள்ளது.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அப்துல் மலபாரி எவ்வித பாகுபாடும் பார்க்காமல் அவரிடம் உதவி என்று வரும் அனைவருக்கும் தன் குழுவால் முயன்றதை செய்து அவர்களுக்கு உண்டான மரியாதை செலுத்தி இறுதி சடங்கை நடத்துகிறார். இதுபோல் கொரோனா வைரசால் இறந்தவர்களை அவர்கள் சார்ந்த சமயங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளின் படி அடக்கம் செய்கிறார் அப்துல் மலபாரி.

தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறக்கும் நபர்களின் குடும்பத்தார் ஒரு சிலர் அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் என அஞ்சி அருகில் செல்ல தயங்கும் போது அப்துலின் குழு தனது சேவையை தொடர்ந்து செய்து வருகிறது.

அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் சூரத் பேரூராட்சி அதிகாரிகள் அப்துல் குழுவை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த சேவையை செய்ய பேரூராட்சி காவல் மற்றும் மருத்துவ குழுவோடு இணைந்து கைகோர்த்துள்ளார் அப்துல் மலபாரி.

மேலும் கொரோனா பாதித்து இறந்த உடல்களை எவ்வாறு கையாளவேண்டும் எனவும், பாதுகாப்பு உபகரணங்களை எப்படி பயன்படுத்துவது, இறந்தவர்களின் உடல்களை எவ்வாறு மூடவேண்டும் என அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளார் அப்துல். தற்போது கொரோனா பாதித்த உடல்களை தான் தகனம் செய்வதை அறிந்த ஒரு சில நண்பர்கள் தூரத்திலிருந்தே தனக்கு சலாம் அடிப்பதாக தெரிவித்த அப்துல் இது தனக்கு எந்தவித மனக்கவலையையும் அளிக்கவில்லை. அப்படி நடந்து கொள்வதே அனைவருக்கும் நல்லது எனவும் கூறுகிறார்.

இந்த சேவையில் இயங்கும் அப்துலும் அவர்களது குழுவும், தங்களின் குடும்பத்திற்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதாற்காக அனைவரும் அவர்களின் அலுவலகத்திலேயே தங்கி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் அரசிடமிருந்து கிடைக்கும் பொருளாதார வசதிகள் போதுமானதாகவே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சூரத் நகரில் வாழும் பலரும் கூட நிதியுதவி செய்வதாகவும், அவர்களுக்கு தனது நன்றியையும் கூறியுள்ளார் அப்துல்.

அப்துல் செய்து வரும் இந்த சேவையை குறித்து கூறிய சூரத் ஊராட்சியின் இணை ஆணையர் ஆஷிஷ் நாயக், 'இந்த இக்கட்டான சூழலில், அப்துல் செய்யும் சேவை என்பது எங்களுக்கு தேவைப்படும் மிக பெரிய உதவி. நாங்கள் அவர்களிடம் உதவி என்று கேட்டவுடனேயே அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். தற்போது அவர்களின் குடும்பங்களை மறந்து நமக்காகவும், நம் நாட்டு மக்களுக்காகவும் தங்களது உயிரை பணையம் வைத்து செயல்பட்டு வருகிறார்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்