உல்லாச கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி.. ‘அது யாரு ஷாருக்கான் மகன் தானே..?’ 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது.. பாலிவுட்டை பரபரப்பாக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உல்லாச கப்பலில் நடைபெற்ற போதைப்பொருள் பார்ட்டியில் ஷாருக்கானின் மகன் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நேற்று மதியம் பிரமாண்ட உல்லாச கப்பல் ஒன்று சுற்றுலா பயணிகளுடன் கிளம்பியது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் (Shah Rukh Khan) மகன் ஆரியன் கானும் (Aryan Khan) பயணம் செய்துள்ளார். இதனிடையே இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பார்ட்டி நடைபெற உள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து போதைப் பொருள் தடுப்பு (NCB) பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே (Sameer Wankhede) தலைமையிலான குழு கப்பலில் அதிரடி சோதனை மேற்கொண்டது. அப்போது தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களான கொகைன், எம்டிஎம்ஏ (Cocaine, MDMA) உள்ளிட்டவற்றை சிலர் பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து உடனடியாக மும்பை துறைமுகத்துக்கு கப்பல் திருப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் 2  பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலுடன் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆரியன் கானும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், கைது செய்யப்படவில்லை என்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆர்யன் கானின் செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். டெல்லியை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் இணைந்து  FashionTV India, ‘கிரே ஆர்க்’ (Cray’Ark) என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்