'அவர் திருமணம் செய்து கொள்வதாக சொன்னார்'... 'அதான் உடலுறவு வச்சுக்கிட்டோம்'... 'ஆனா, ஆண் மீது தப்பு இருக்கா'?... உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணம் செய்துகொள்வதாக ஓர் ஆண் வாக்குறுதி கொடுத்துவிட்டார் என்பதை அடிப்படையாக வைத்து அந்த ஆணுடன் பலமுறை உடலுறவில் ஈடுபட்டால் அதைப் பாலியல் வல்லுறவாகக் கருத முடியுமா என்பது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு விவாத பொருளாக மாறியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஓர் இளம்பெண் ஒருவர் டெல்லி  உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதில், ''தன்னை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். அதனை நம்பிய நான் அந்த இளைஞருடன் பல மாதங்களாக  நெருங்கிப் பழகி வந்தேன். இதனால் இருவரும் உடலுறவில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் அந்த நபர் திடீரென என்னைத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என விலகிச் சென்று விட்டார். எனவே அவர் மீது பாலியல் வன்கொடுமை புகாரில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விபு பக்ரு, அந்த பெண்ணின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக நீதிபதி அளித்த தீர்ப்பில், ''திருமணம் செய்வதாக உறுதி அளித்ததை அடிப்படையாக வைத்து நீண்டநாள் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்கொடுமைக் குற்றமாகக் கருதமுடியாது. ஏனென்றால் நீண்ட காலமாக இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் தான் உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அதன் பின்னர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

அதேநேரத்தில் மாதக் கணக்கில் ஒன்றாக வாழ்ந்து உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தால் அதன்பின்னர் பாலியல் வன்கொடுமைக் குற்றம் சுமத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாக உள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது'' என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்துப் பேசிய வழக்கறிஞர்கள், ''ஒரு ஆண் திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறியதால், நான் அவனுடன் பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டேன், ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ளமாட்டான் எனக் கூறுகிறான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது பாலியல் வல்லுறவில் வராது. அதற்கு முக்கிய காரணம், ஒவ்வொரு முறையும் உடலுறவு என்பது அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் நடந்துள்ளது.

அந்த ஆண் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அதற்காக இதற்கு முன்பு நடந்ததெல்லாம் அந்தப் பெண்ணின் சம்மதம் இல்லாமல் நடந்ததாகாது என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாராம்சம்'' என விளக்கமளித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்