''இது'க்கு ஏன் டைம் கொடுக்கணும்'!?.. 'வட்டிக்கு வட்டி வசூலா'?.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!.. கடன் செலுத்துவதற்கான சலுகை நீட்டிக்கப்படுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பலர் வேலையை இழந்து தவித்ததால், அனைத்து வகையான வங்கிக் கடன்களுக்கும் தவணை, வட்டி செலுத்துவதற்கு 6 மாத சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இதனிடையே, கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட சலுகைக்கு, வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், கடனை செலுத்துவதற்கான சலுகையை நீட்டிக்க வேண்டும், சலுகை காலத்தில் செலுத்த வேண்டிய வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.

ஏற்கனவே, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பெறப்பட்ட கடன்களின் ஒத்திவைக்கப்பட்ட தவணைகள் மீது வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதனை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் கேட்டிருந்தது.

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறைக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில், ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதில், '6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கேட்பது நியாயமல்ல. ரூ.2 கோடி வரை மட்டும் கடன் பெற்றவர்களிடம் வசூலித்த 6 மாத கூடுதல் வட்டியை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளது.

அதற்கு விளக்கமளித்துள்ள மத்திய அரசு, 'வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் முடிவின் அமலாக்கம் தொடங்கிவிட்டது' என தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறைக்கு எதிரான வழக்கை நவம்பர் 2ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்