தீயாக பரவிய 'ஒரு' தகவல்...! 'ஒரு இடம் விடாம சல்லடை போட்டு தேடுறாங்க...' என்ன காரணம்...? - மக்கள் வந்து குவிஞ்சிட்டே இருக்காங்க...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன ஜொன்னகிரி கிராமத்தில் விவசாயி ஒருவரின் நிலத்தில் வைரம் கிடைத்ததாக கூறியுள்ளார், மேலும் அந்த வைரத்தை உள்ளூர் வைர வியாபாரி ஒருவருக்கு ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக தகவல் ஊரெங்கிலும் பரவியது.

தீப்போல பரவிய தகவலை நம்பி கிராமத்து மக்கள், நம்ம ஊரில் வைரமா ?என்று சரளைக்கற்கள் நிறைந்த வயல்வெளியை அலச தொடங்கி இருக்கின்றனர் ..!

அந்த நபருக்கு வைரம் கிடைத்த தகவல் சமூக வளைதளங்களிலும் வேகமாக பரவி வருவதால், கர்னூல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பக்கீரப்பா தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் மக்கள் விலைமதிப்பற்ற வைர கற்களைக் கண்டுபிடித்த சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.

பெயரே தெரியாத ஒரு நபர் வைரத்தைக் கண்டுபிடித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் கர்னூல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பரப்பப்படுகிறது. 2019-ஆம் ஆண்டில், ஒரு விவசாயி ஒருவர் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தைக் கண்டுபிடித்ததாகவும், 2020 ஆம் ஆண்டில், இரண்டு கிராமவாசிகள் தலா 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு வைர கற்களைக் கண்டுபிடித்ததாகவும், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தை 50,000 ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது. சிலர் அன்றாட வேலைகளை விட்டுவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் சில மாதங்கள் இந்த கிராமங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைரத்தை தேடி வருகிறார்கள்.

இதில் உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் தகவல்களை நம்பி பல தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களும் அரசும் இப்பகுதியில் வைரங்களை கடந்த காலங்களில் தேடியுள்ளனர். இதற்கு அங்குள்ள கிராம மக்கள் சந்திரமுகி சினிமா பாணியிலான மூன்று விதமான வரலாற்று கதைகளை கூறுகின்றனர்.

அதன்படி அசோக பேரரசரின் காலத்திலிருந்து வைரங்கள் இப்பகுதியின் மண்ணில் இருந்தன என்று சிலர் கூறுகிறார்கள். கர்னூலுக்கு அருகிலுள்ள ஜொன்னகிரி மெளரியர்களின் தெற்கு தலைநகரான சுவர்ணகிரி என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கி.பி.1333 ஆம் ஆண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரும் அவரது மந்திரி திம்மருசுவும் வைரங்கள் மற்றும் தங்க ஆபரணங்களின் ஒரு பெரிய புதையலை அப்பகுதியில் புதைத்ததாகவும் அவைதான் மேலே வருவதாக சிலர் கூறுகின்றனர். மற்றொரு கதையின்படி கி.பி 1518 ஆம் ஆண்டு குட்டப் ஷாஹி வம்சம் என்று அழைக்கப்படும், கோல்கொண்டா சுல்தானேட் ஆட்சி காலத்தில் வைரங்கள் இப்பகுதியில் மண்ணில் மறைத்து வைக்கப்பட்டதாக ஒரு கதை சொல்லப்படுகின்றது.

இந்த சம்பவம் அந்த மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்