தூங்க ஆரம்பிச்சுட்டாருன்னா எழுப்பறது ரொம்ப கஷ்டம்.. குறைஞ்சது 25 நாளாவது ஆகும்.. ‘விநோத’ நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வருடத்துக்கு 300 நாட்கள் தூக்கத்திலேயே இருக்கும் அரிய நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நாகூரை சேர்ந்தவர் புர்காரம் (42 வயது). இவர் ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா (Axis Hypersomnia) என்ற விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் வருடத்துக்கு கிட்டத்தட்ட 300 நாட்கள் தூக்கத்தில்தான் இருக்கிறார். இந்த நோயின் காரணமாக ஒருமுறை தூங்க ஆரம்பித்தால், இவர் எழுந்திருக்க சுமார் 25 நாட்கள் ஆகும் என்கின்றனர்.

பத்வா என்ற கிராமத்தில் பலசரக்கு கடை ஒன்றை புர்காரம் நடத்தி வருகிறார். ஆனால் இந்த விநோத நோய் காரணமாக மாதத்துக்கு 5 நாட்கள் மட்டுமே அவரால் கடையை திறந்து வியாபாரம் நடத்த முடிகிறது. தொடக்கத்தில் 5 முதல் 7 நாட்கள் வரை இடைவிடாமல் தூங்கியவர், தற்போது 20 முதல் 25 நாட்கள் வரை தூங்குவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் குறித்து தெரிவித்த மருத்துவர்கள், இந்த விநோத நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் தூக்கத்தில் இருந்து எழ முயன்றாலும், அவர்களது உடல் ஒத்துழைப்பு தராது என தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தூங்குவதற்கு முன்பு கடுமையான தலைவலியால் பாதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளனர்.

புர்காராம் தூங்கிவிட்டால் அவரை எழுப்ப படாதபாடு படுவதாக அவரது உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் தூக்கத்தில் இருக்கும்போதே அவருக்கு உணவு ஊட்டுகின்றனர். இந்த விநோத நோயில் இருந்து புர்காரம் விரைவில் குணமடைந்துவிடுவார் என அவரது தாயும், மனைவியும் நம்பிக்கை வைத்துள்ளனர். எப்போதும் தூக்கத்திலேயே இருப்பதால் புர்காரமை அப்பகுதி மக்கள் ‘கும்பகர்ணன்’ என அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்