பிரசாந்த் கிஷோர் 'காங்கிரஸ்' கட்சியில் இணைகிறாரா...? 'ராகுல் காந்தியை சந்தித்த நிலையில்...' - வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேர்தல் வியூகப் பணியில் இருந்து விலகப்போவதாக தெரிவித்த பிரசாத் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. தமிழகத்தில் திமுக மற்றும் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரஷாந்த் கிஷோர் பிரச்சார வியூகம் அமைத்ததும் அனைவரும் அறிந்ததே.

அப்போது தேர்தல் முடிவுகளுக்கு பின் தான் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிட உள்ளதாகவும் பிரசாந்த கிஷோர் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பின் பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இரண்டு முறை சந்தித்துப் பேசினார். மிஷன் 2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. இதன் மூலம் தான் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதில்லை என்பதை சூசகமாக வெளிப்படுத்தினார்.

மிஷன் 2024 எனப்படும் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் பிரசாத் கிஷோர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் டெல்லியில் நேற்று (13-07-2021) திடீரென சந்தித்து பேசியுள்ளார். அப்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்ததாகவும், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னோட்டமாகவும், நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது, பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் விவகாரம் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியை வலிமையாக்கவும், 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அக்கட்சியை பாஜகவுக்கு எதிராக வலிமை கொண்ட எதிர்க்கட்சியாக மாற்றவும் பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வராத நிலையில் தகவல்கள் இங்கொன்றும், அங்கொன்றுமாய் சுற்றி வருகிறது. ஏற்கெனவே ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்