'ஹார்ட் ஆபரேஷன் பண்ணணும்'...'பேங்க்'ல இருந்து பணத்தை எடுக்க முடியல'...முதியவருக்கு நேர்ந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மருத்துவ செலவுக்காக டெபாசிட் செய்திருந்த ரூ.80 லட்சம் பணத்தை எடுக்க முடியமால், முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முரளிதர் என்ற 83 வயது முதியவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினார்கள். இதையடுத்து பிஎம்சி வங்கியில் முதியவர் டெபாசிட் செய்திருந்த ரூ.80 லட்சம் பணத்தை எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் ரிசர்வ் வங்கியின் கட்டுபாடுகள் காரணமாக அவரது மருத்துவ செலவுகளுக்காக அந்த பணத்தை, முதியவர்களின் உறவினர்களால் எடுக்க முடியவில்லை.

இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யாத காரணத்தால் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பி.எம்.சி வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துள்ளவர்கள் உயிரிழந்துள்ளது இது நான்காவது நிகழ்வாகும். முன்னதாக, பிஎம்சி வாடிக்கையாளர்கள் மாரடைப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் ஒரு பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே டெபாசிட் செய்த தொகையில் ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும் என்று ஆர்பிஐ கடும் கட்டுபாடுகள் விதித்திருந்த நிலையில், பின்னர் அதனை ரூ.40,000-ஆக உயர்த்தி 3 முறையாக அதனை பிரித்து எடுத்துக்கொள்ளலாம் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது. முன்னதாக, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியிடம் வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் (ஹெச்டிஐஎல்) ரூ.4,355 கோடி அளவுக்கு கடன் வாங்கியது. ஆனால், அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை. அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், கடன் விவரத்தை ரிசர்வ் வங்கியிடமிருந்து மறைத்து விட்டனர்.

இதனைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் தொடர் கண்காணிப்பை அடுத்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதன்விளைவாக கடந்த செப்.23ம் தேதி முதல் பிஎம்சி வங்கியில் பணத்தை எடுக்க வாடிக்கையாளர்களுக்கு கடும் கட்டுபாடுகளை விதித்தது ஆர்பிஐ. இதனால் மும்பை நீதிமன்றம் முன்பாக, பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர். இந்த போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய சஞ்சய் குலாத் என்பவர் அன்று இரவே மாரடைப்பால் மரணமடைந்தார்.

இதற்கிடையே  பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்து அதனை எடுக்க முடியமால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது தான், சோகத்தின் உச்சம்.

MUMBAI, PMC BANK SCAM, MURLIDHAR DHARRA, DEPOSITOR, HEART SURGERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்