'விஷத்தை அடக்கிய நீலகண்டன் போல்'... 'வைரலாகும் மாமல்லபுரம் கவிதையின்' தமிழ் வெர்ஷன்.. ட்விட்டரில் பதிவிட்ட மோடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அக்டோபர் 10-ஆம் தேதி தொடங்கியது இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கான ஆயத்தம். அதன் தொடர்ச்சியாக சென்னை அருகே உள்ள மாமல்ல்புரத்துக் கடலோரம் உள்ள கோவளம் கடற்கரைச் சந்திப்பும் நிகழ்ந்தது.

அப்போது கடற்கரை அலைகளின் நுரைகளில் கால்தடம் பதித்து, அதன் சிலிர்ப்பில் பிரதமர் மோடி கவிதை ஒன்றை வரைந்தார். அந்த கவிதையை இந்தியில் எழுதிய மோடி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். என்னதான் பலர் மொழிமாற்றம் செய்து புரிந்துகொண்டாலும், சிலர் இந்தி தெரிந்தவர்களிடம் கேட்டறிந்துகொண்டாலும் அதன் அர்த்தத்தை அந்த கவிதையை வரைந்தவரே தமிழில் கொடுப்பது போல் வருமா?

அதற்காகவே, பிரதமர் மோடி இந்தியில் எழுதியிருக்கும் அந்த கவிதையை, மொழிமாற்றம் செய்யச் சொல்லி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,  ‘சிலநாட்களுக்கு முன்பு மாமல்லபுரம் கடற்கரைக் காட்சியை நான் கவிதையாக வடித்ததன் தமிழ் வடிவம்’ என்கிற கேப்ஷனோடு பகிர்ந்துள்ளார். இதோ அந்த கவிதையின் அதிகாரப்பூர்வ தமிழ் வடிவம்.

 

அலைகடலே!

அடியேனின் வணக்கம்

அளப்பறிய, முடிவற்ற,

ஒப்பில்லாத வர்ணனைகளைக் கடந்த

நீலக் கடலே...

உலகிற்கு உயிரளிக்கும் நீ

பொறுமையின் இலக்கணம்

ஆழத்தின் உறைவிடம்.

அலைகடலே!

அடியேனின் வணக்கம்

வெளித்தோற்றத்திற்கு

கோபமாய், வீரத்துடன்

பேரிரைச்சலோடு எழும் அலைகள் -

உன்வலியா? வேதனையா?

துயரமா? எதன் வெளிப்பாடு?

இருந்த போதிலும் உன்னை

கலக்கமின்றி, தடுமாற்றமின்றி

உறுதியுடன் நிற்கச் செய்கிறது

உன் ஆழம்.

அலைகடலே!

அடியேனின் வணக்கம்

உன்னிடம் உள்ளது

எல்லையில்லாத வலிமை.

முடிவில்லாத சக்தி - ஆனாலும்

பணிதலின் பெருமையை

நிமிடந்தோறும் நவில்கிறாய் - நீ

கரையைக் கடக்காமல்

கண்ணியத்தை இழக்காமல்.

கல்வித் தந்தையாய்

ஞான குருவாய்

வாழ்க்கைப் பாடத்தை

போதிக்கிறாய் நீ

புகழுக்கு ஏங்காத,

புகழிடத்தை நாடாத

பலனை எதிர்நோக்காத

உன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம்.

அலைகடலே!

அடியேனின் வணக்கம்

நிற்காமல், சளைக்காமல்

வீசும் உன் பேரலைகள்

'முன்னேறுவதே வாழ்க்கை' என்ற

உபதேச மந்திரத்தை உணர்த்தும்

முடிவில்லாத பயணமே

முழுமையான உன் போதனை

அலைகடலே!

அடியேனின் வணக்கம்

விழும் அலைகளிலிருந்து

மீண்டும் எழும் அலைகள்

மறைந்து

மீண்டும் துவங்கும் உதயம்

பிறப்பு - இறப்பு என்பது தொடர் வட்டம்

உனக்குள் மடிந்து - பின்

உயிர்த்தெழும் அலைகள்

மறுபிறப்பின்

உணர்வூட்டம்

அலைகடலே!

அடியேனின் வணக்கம்

பழம்பெரும் உறவான

சூரியனால் புடமிட்ட

தன்னையழித்து,

விண்ணைத் தொட்டு

கதிரவனை முத்தமிட்டு

மழையாய் பொழிந்து

 

நீர்நிலைகளாய், சோலைகளாய்

மகிழ்ச்சி மணம் பரப்பி

படைப்பை அலங்கரித்து - எல்லோருக்கும்

வாழ்வளிக்கும் நீர் நீ

அலைகடலே!

அடியேனின் வணக்கம்

வாழ்வின் பேரழகு நீ -

விஷத்தை அடக்கிய

நீலகண்டன் போல் - நீயும்

எது வந்தாலும் ஏற்றுக் கொண்டு

புது வாழ்வைப்

பிறர்க்களித்து

சொல்கிறாய்

சிறந்த வாழ்வின்

மறைபொருளை!

அலைகடலே!

அடியேனின் வணக்கம்

- நரேந்திர மோடி.

NARENDRAMODI, MODIXIJINPINGMEET, MAMALLAPURAMSUMMIT, POEM, VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்