'திடீரென பந்தியில் இருந்து கட கடவென எழுந்து போன புதுமாப்பிள்ளை'... 'Sorry, இந்த கல்யாணம் நடக்காது'... 'பதறி போன பெண் வீட்டார்'... மணமகன் சொன்ன பகீர் காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீப நாட்களாக வட இந்தியாவில் திருமணங்கள் பாதியிலேயே நின்று போவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் ஒரு வித்தியாசமான காரணத்திற்காகத் திருமணம் நின்று போயுள்ளது.

ஒடிசா மாநிலம் சுகிந்தா பிளாக் பாந்தகவன் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமாகாந்த் பத்ரா என்ற 27 வயது இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்காக மணமகன் ஊர்வலமாக மண்டபத்திற்கு வந்தார்.

இதையடுத்து திருமண சடங்குகள் நடந்த நிலையில், அங்கு மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண் வீட்டார் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். மாப்பிள்ளை வீட்டார் விருந்து சாப்பிடப் பந்தியில் அமர்ந்திருந்தனர். அப்போது சாப்பாடு பரிமாறப்பட்ட நிலையில், அவர்களுக்கு மட்டன் வைக்கப்படவில்லை. இதனால் கோபமான மாப்பிள்ளை வீட்டார் ஏன் மட்டன் வைக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது விருந்துக்கான பட்டியலில் மட்டன் இல்லை எனப் பெண் வீட்டார் கூறியுள்ளனர். இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருடன் சண்டை போட்டனர். இந்த சண்டை ஒரு புறம் நடந்து கொண்டிருந்த நிலையில், இந்த விவகாரம் மாப்பிள்ளை ராமாகாந்த் பத்ராவிற்கு தெரிய வந்தது. அப்போது அவர் பந்தியில் அமர்ந்திருந்த நிலையில், திடீரென பந்தியை விட்டு எழும்பி வேகமாக மண்டபத்தை விட்டு வெளியே செல்ல முயன்றார்.

இதனால் பதறிப் போன பெண் வீட்டார் ஓடிச் சென்று புது மாப்பிள்ளையைச் சமாதானம் செய்தனர். ஆனால் அதனைக் கொஞ்சமும் கேட்காமல் இந்த கல்யாணம் நடக்காது எனக் கூறியுள்ளார். சாப்பாட்டில் மட்டன் வைக்கவில்லை என்ற காரணத்திற்காக மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்தியது பெண் வீட்டாரை நிலைகுலையச் செய்தது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் அவர்களது உறவினர் வீட்டிற்குச் சென்று தங்கினர்.

அங்கேயே மாப்பிள்ளைக்கு உடனடியாக வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனப் பேசி அங்கேயே வேறு பெண்ணை பார்த்து மறுநாளே அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன் வீட்டிற்குத் திரும்பினார் அந்த இளைஞர். ஆனால் இந்த சம்பவம் குறித்து பெண் வீட்டார் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் பெண் வீட்டாருக்குத் தைரியம் கூறி வருகிறார்கள். அதில், நிச்சயம் உங்கள் பெண் பெரும் ஆபத்திலிருந்து தப்பி விட்டார். மட்டன் வைக்கவில்லை என்ற காரணத்திற்காக அந்த குடும்பம் திருமணத்தை நிறுத்தியுள்ள நிலையில், நாளை ஒரு சிறிய பிரச்சனை என்றால் உங்கள் பெண்ணின் நிலையை நினைத்துப் பாருங்கள் எனப் பதிவிட்டுள்ளார்கள்.

அதே நேரத்தில், 90ஸ் கிட்ஸ் பலருக்கு இன்னும் திருமணம் நடக்காத நிலையில், இந்த காரணத்திற்குக் கூடவா திருமணத்தை நிறுத்துவீர்கள் என தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்