என் மகளே... நீ எங்க இருக்க...? கேரள ஐஎஸ் தீவிரவாதி நிமிஷாவை 'ரிலீஸ்' செய்த தாலிபான்கள்...! - உதவி கேட்டு கதறி அழும் தாய்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தாலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், எதிர்பார்த்ததைவிட தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கானில் நடந்த ஆயுதப் போரில் தாலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரஃப் கனி ஆப்கான் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானை கைபற்றியுள்ள தாலிபான்கள் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பல்வேறு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளை விடுவித்து வருகின்றனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பாத்திமாவையும், நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளுடன் சேர்த்து தாலிபான்கள் விடுவித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பாத்திமா இந்துவாக இருந்த அவர் பின்னர் மதம் மாறி தனது கணவருடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்தார். ஆப்கனில் இருந்த போது அவரது கணவர் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்.

கைக்குழந்தையுடன் இருந்த பாத்திமா, 2019-ஆம் ஆண்டு ஏராளமான தீவிரவாதிகளுடன் ஆப்கான் படையினரிடம் சரணடைந்தார். அவரை உடனடியாக சிறையில் அடைத்திருந்தனர். தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதும் தற்போது நிமிஷா பாத்திமாவை சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளனர்.

இந்நிலையில் தனது மகள் நிமிஷா பாத்திமா மற்றும் அவரது மகளை இந்தியா அழைத்து வர வேண்டும் என அவரது தாய் பிந்து மன்றாடி கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது ‘‘எனது மகள் நிமிஷாவையும், அவரது ஐந்து வயது மகளையும் விடுதலை செய்துவிட்டார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால், அவர்கள் எங்கு உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு உதவ வேண்டும். எனது மகள் செய்த தவறுக்கு இந்திய சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்