'வாழ்க்கையை எவ்வளவு கனவுகளோடு தொடங்கி இருப்பாங்க'... 'அந்த ரோட்ல போனது தான் தப்பா'?... புது மண தம்பதிக்கு நடந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணமாகி புது வாழ்க்கையைப் பல கனவுகளோடு தொடங்க இருந்த புது மண தம்பதிக்கு நடந்துள்ள துயரம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் ரயன். 26 வயதான இவருக்கும் பிரியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்படி இருவரின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் தனியாக வீடு பார்த்து அங்கு தங்களின் வாழ்க்கையைத் தொடங்க ஆரம்பித்துள்ளார்கள். இருவரும் மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதால், இருவரும் ஒன்றாக பணிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அந்த வகையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பணிக்குச் சென்ற ரயன், பிரியா இருவரும் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது Thokkuttu என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த நேரத்தில், வேகமாக வந்த லாரி தம்பதியர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரயனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவரும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த பகுதி மிகவும் மோசமான பகுதி என்றும் அங்கு அவ்வப்போது விபத்துகள் நடப்பது தொடர்கதையாகியுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். பலமுறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சட்டியுள்ளார்கள். சராசரியாக 1214 சாலை விபத்துகள் இந்தியாவில் நடப்பதாகக் கூறும் புள்ளி விவரம் அதில் இறப்பவர்கள் 377 பேர் எனத் தெரிவிக்கிறது.

இந்த சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தான். மோசமான சாலைகள், சாலைகளைச் சரியாகப் பராமரிக்காமல் இருப்பது, சாலையில் இருக்கும் திடீர் பள்ளங்கள், சரியான இடத்தில் வேகத்தடை இல்லாமல் இருப்பது, வாகன நெருக்கம் அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிப்பது போன்றவை இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

இதற்கிடையே புதுமண தம்பதியர் விபத்தில் இறந்த விவகாரம் பலரிடம் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த மங்களுரு மாநகர காவல்துறை ஆணையர், விகாஸ் குமார், இனிமேல் இதுபோன்ற மோசமான விபத்துகள் நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின்னர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர், சாலைகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பது நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிலையில் வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த புதுமண தம்பதி ரயன் மற்றும் பிரியாவின் மரணம் அவர்களது குடும்பத்தை மொத்தமாக உலுக்கி எடுத்துவிட்டது. அந்த சாலையில் சென்றதைத் தவிர அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதார்கள். அவர்களின் கேள்விக்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பதில் கூறுவார்களா.?

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்