இந்தியாவில் இதுவரை 5000 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு.. எந்த மாநிலத்தில் பாதிப்பு அதிகம்..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கருப்பு பூஞ்சை (Black Fungus) நோய் தாக்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டவர்களை எளிதாக தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை 5000 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், ‘இதுவரை 18 மாநிலங்களில் 5424 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக குஜராத்தில் 2165 பேரும், மகாராஷ்டிராவில் 1188 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 663 பேர், மத்திய பிரதேசத்தில் 590 பேர், ஹரியானாவில் 339 பேர், ஆந்திர பிரதேசத்தில் 248 பேரும் இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 5424 பேரில் 4556 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 சதவீத நோயாளிகளுக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது. கருப்பு பூஞ்சை நோய் தொற்றை தடுக்க நீரிழிவு பாதிப்பை முடிந்தவரை முழுமையாக குணப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகளை வரைமுறையின்றி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 லட்சம் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்துக் குப்பிகளை வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு இறுக்குமதி செய்ய உள்ளது. இதில் முதற்கட்டமாக 50,000 குப்பிகள் வந்துவிட்டன. இன்னும் 7 நாட்களில் 3 லட்சம் குப்பிகள் வந்துவிடும். கொரோனா சிகிச்சைக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 70 லட்சத்துக்கும் அதிகமான ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகளும், 45,735 செயற்கை சுவாசக் கருவிகளையும் மத்திய அரசு அனுப்பியுள்ளது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்