'43 பேர் பலி'.. அதிகாலையில் மளமளவென பற்றிய தீ... தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் அதிகமான தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

இரவு பணிகள் நடக்காததால், இயந்திரங்களும் இயக்கப்படாமலே இருந்துள்ள சுழலில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து உண்டாகியதில் தொழிலாளர்கள் செய்வதறியாது ஸ்தம்பித்தனர். பள்ளிக்குழந்தைகளுக்கான பை தயாரிக்கும் அந்த  தொழிற்சாலை முழுவதும் மளமளவென பரவிய தீயால்,  தொழிற்சாலையே பற்றி எரிந்தது.

மேலும் தீவிபத்தினால் உண்டான கரும்புகைக்குள் சிக்கிய தொழிலாளர்கள்  43 பேர் தீயில் கருகி பலியாகிய சம்பவம் டெல்லியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படும் நிலையில், தொழிற்சாலைக்குள் தீப்பற்றியதைத் தொடர்ந்து, அருகில் இருந்த மக்கள் தத்தம் வீடுகளில் இருந்து வெளியேறியதால் தப்பினர்.

படுகாயமடைந்து மீட்கப்பட்ட பலரும் அருகில் இருக்கும் இந்து ராவ் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அதே இடத்தில் உள்ள 4 மாடிக் கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ பரவியதால் தீயணைப்புப் போலீஸார் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்