"புடவை ஒண்ணுக்கு ஆசைப்பட்டு... ஒரு 'லட்ச' ரூபா 'நகை'ய தொலைச்சுட்டனே",,.. புலம்பும் 'பெண்'.. நடந்தது என்ன??

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் அமைந்துள்ள நெருள் என்னும் பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்மணி ஒருவர் நூதன முறையில், சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள தனது தங்க நகைகளை இழந்துள்ளார்.

நெருள் பகுதியிலுள்ள மதுரா பாட்டில் என்ற பெண்மணி தான் தங்க நகைகள் பறிகொடுத்தவர். இவர், அங்குள்ள ரேஷன் கடை ஒன்றில் பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். அவருடன் சிந்து நிகாம் என்ற 65 வயது பெண்மணியும் உடன் இருந்துள்ளார். அப்போது ரேஷன் கடை மூடிக் கிடந்துள்ளது. இதனால், மதுரா மற்றும் சிந்து ஆகியோர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இருவரும் கடையில் இருந்து சிறிது தூரம் விலகிச் சென்றதும், மதுராவின் கழுத்தில் தங்க நகைகள் கிடப்பதை கண்ட சுமார் 20 வயது இளைஞர் ஒருவர், அவர்களை வழிமறித்த நிலையில், அந்த இளைஞர் மதுராவிடம், தனது சக ஊழியர் ஒருவருக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது என்றும், நீங்கள் வந்து அவர்களின் குழந்தைகளை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல், தற்போது குழந்தை பிறந்துள்ளதால் அந்த ஊழியர், ஏழைகளுக்கு புடவைகள், காலணிகள் மற்றும் மளிகை பொருட்களை இலவசமாக வழங்குவதாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மேலும் இரண்டு பேர் அங்கு வந்துள்ளனர். அவருடன் நிகாம் நின்றுள்ள நிலையில், முதலில் வந்த இளைஞர் மதுராவை அழைத்துக் கொண்டு ஒரு பள்ளிக்கூடத்தின் அருகே காத்திருக்குமாறு கூறியுள்ளார்.

அப்போது அந்த இளைஞர், தனியாக நின்று கொண்டிருந்த மதுராவிடம், உங்களிடம் உள்ள தங்க நகைகளை கழற்றினால் தான் நீங்கள் பார்ப்பதற்கு ஏழையைப் போல இருப்பீர்கள் எனக்கூறி, தன்னிடம் இருந்த பிளாஸ்டிக் பையில் நகைகளை போடுமாறு இளைஞர் தெரிவித்துள்ளார். அதனை நம்பி, தனது தாலி மற்றும் தங்க வளையல்கள் உட்பட சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பிளாஸ்டிக் பையில் மதுரா போட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த மூன்று பேரும், மதுராவின் தங்க நகைகளுடன் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மதுரா, இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்