"என் சக்ஸஸ் தான் பேசணும்.. ஆனா..".. வைரல் இளைஞர் வச்ச வித்தியாசமான கோரிக்கை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய ராணுவத்தில் சேர தினந்தோறும் வேலையை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு ஓடியே பயிற்சி மேற்கொள்ளும் இளைஞரின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இந்நிலையில் அந்த இளைஞர் வித்தியாசமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

Advertising
>
Advertising

பிரதீப் மெஹ்ரா

உத்ரகாண்ட் மாநிலத்தின் பரோலா பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் மெஹ்ரா. இவருடைய வயது 19. இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தீராத ஆசை உடைய பிரதீப் தனது வீட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வருகிறார். இரவு பணி முடிந்ததும் உணவகத்தில் இருந்து ஓடியே தனது வீட்டிற்கு செல்வது பிரதீப்பின் வழக்கமாகும்.

இந்நிலையில் திரைப்பட இயக்குனர் வினோத் காப்ரி எதேச்சையாக அப்பகுதி வழியே கார் ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்போது தான் ஓடிக்கொண்டிருந்த பிரதீப்பை பார்த்திருக்கிறார். 'எதற்காக இப்படி என ஒடுகிறாய்?' வினோத் கேட்க அதற்கு பிரதீப் சொன்ன பதில் அவரை திகைக்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து ஓடிக்கொண்டே பதில் சொன்ன பிரதீப்,"இந்திய ராணுவத்தில் சேர்வதே எனது லட்சியம் ஆகும். தினமும் காலையில் எட்டு மணிக்கு எழுந்து உணவு தயாரித்தலில் ஈடுபடுவதால் என்னால் காலை நேரங்களில் பயிற்சி செய்ய முடியவில்லை. என் அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பயிற்சிக்காக வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளேன். ஆகவே, இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் நான் பயிற்சி பெற்று வருகிறேன்" என பிரதீப் தெரிவித்திருக்கிறார்.

 

வினோத் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரையில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். வறுமையிலும் தன்னுடைய கனவினை நோக்கி ஓடும் இந்த இளைஞரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 

குவிந்த பாராட்டு

பிரதீப் மெஹ்ராவின் வீடியோவை பார்த்துவிட்டு முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சன், ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் பிரதீப் மெஹ்ராவை வெகுவாக பாராட்டியுள்ளனர். சமூக வலை தளங்களில் வீடியோ வைரல் ஆனதால் தனது வாழ்க்கை ஒரே நாளில் மாறிவிட்டது போல இருப்பதாக பிரதீப் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் தனது இலக்கை அடையவிடாமல் கவன சிதறலை ஏற்படுத்துவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கவன சிதறல்

இதுகுறித்து அவர் பேசுகையில்," வீடியோ வெளியானது முதல் என்னுடைய போன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் சரியான நேரத்தில் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. என்னுடைய வீடியோ இப்படி பேசப்படுவதை விட, என்னுடைய வெற்றி இவ்வாறு பேசப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். வீடியோ வெளியானதன் காரணமாக பலரும் என்னை அழைக்கிறார்கள். என்னால் சரியாக பயிற்சி செய்ய முடியவில்லை. மேலும், இது எனது கவனத்தை  சிதறடிக்கிறது. இதனாலேயே பலர் என்னிடம் நேர்காணல் அளிக்கும்படி கேட்டபோதும் நான் மறுத்துவிட்டேன்" என்றார்.

பிரதீப்பின் வீடியோ வைரலானதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா, பிரதீப்பிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

INDIANARMY, PRADEEPMEHRA, VIRALVIDEO, இந்தியராணுவம், பிரதீப்மெஹ்ரா, வைரல்வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்