'நீ, நான் என போட்டிப்போடும் பணக்காரர்கள்'... 'காவலுக்கு 6 நாய்கள்'... 'பீப்பியை எகிற வைக்கும் மாம்பழத்தின் விலை'... சும்மா நட்டு வச்ச மரக்கன்றால் மாறிய வாழ்க்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வாழ்க்கை நமக்கு எந்த நேரத்திலும் எந்தவிதமான வாய்ப்பையும் கொடுக்கலாம். ஆனால் நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா என்பது தான் கேள்வி. அப்படி ஒரு வாய்ப்பை தான் இந்த தம்பதியர் பெற்றுள்ளார்கள்.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரை சேர்ந்த தம்பதி தான் சங்கல்ப் -ராணி. இவர்களுக்கு ஒரு சிறிய பழத்தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். அப்போது மற்ற மரக்கன்றுகளைப் போலத் தான் அவையும் வளரும் என அந்த தம்பதி நினைத்தது.

ஆனால் அவர்களின் நினைப்பைப் பொய்யாக்கியுள்ளது அந்த மரக்கன்றுகள். காரணம் அது அரியவகை ஜப்பான் Miyazaki வகையைச் சேர்ந்த மாம்பழங்கள் ஆகும். அந்த மாம்பழத்தில் அப்படி என்ன சிறப்பு என நீங்கள் நினைக்கலாம். இது உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழ வகைகளில் ஒன்றாகும். இதன் ஒரு கிலோ கிராமின் விலை ரூ 2 லட்சம் 70 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து சங்கல்ப் - ராணி தம்பதியர் கூறுகையில், ''கடந்தாண்டு எங்கள் தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் மாம்பழங்களைத் திருடிச் சென்றுவிட்டனர். இதன்பின்னர் தான் 4 காவலாளிகள் மற்றும் 6 நாய்களைக் காவலுக்குப் போட்டுள்ளோம். இந்தியாவில் இந்த வகை மாம்பழங்கள் விளைவது அரிதிலும் அரிது மிக அரிது, எனக் கூறிய தம்பதியர் இந்த மரக்கன்றுகள் அவர்கள் கையில் கிடைத்த சுவாரசிய சம்பவத்தை விளக்கினர்.

அதன்படி, சங்கல்ப் - ராணி தம்பதி சென்னைக்கு மரக்கன்றுகள் வாங்கச் சென்ற போது ரயிலில் ஒருவரைச் சந்தித்துள்ளார்கள். அவர்கள் தான் தம்பதிக்கு இந்த மரக்கன்றுகளை முதலில் கொடுத்துள்ளார்கள். அதோடு மரக்கன்றைக் குழந்தை போலப் பாதுகாத்து வளர்க்குமாறு கூறியுள்ளார். அது தான் பின்னாளில் Miyazaki வகை மாம்பழ மரமாக வளர்ந்தது.

இதற்கிடையே ஒரு பழத்தை ரூ 21000 கொடுத்து விலைக்கு வாங்கப் பல பணக்காரர்கள் போட்டிப் போட்டு இருக்கிறார்கள். ஆனால் மாம்பழத்தை விற்க விருப்பம் இல்லை எனக் கூறியுள்ள சங்கல்ப் - ராணி தம்பதி, அதிக செடிகளை வளர்க்கப் பழங்களைப் பயன்படுத்துவோம் எனக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கேள்விப்பட்ட மத்தியப் பிரதேச தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஆர்.எஸ் கடாரா கூறுகையில், பழத்தோட்டத்தை ஆய்வு செய்துள்ளேன், இந்த பழம் இந்தியாவில் அரிதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளேன். இது விலை உயர்ந்தது, ஏனெனில் அதன் உற்பத்தி மிகக் குறைவு, அதன் சுவை மிகவும் இனிமையானது எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்