கள்ளக்காதலுக்கு 'இடையூறு'... குடும்பத்தையே 'தீர்த்துக்' கட்டிய வாலிபர்... நாடகமாடி சிக்கியது 'அம்பலம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாகராஜ் பகுதியில் வாலிபர் ஒருவர் தனது பெற்றோர்கள், மனைவி மற்றும் சகோதரி ஆகிய நான்கு பேரையும் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாகராஜ் பகுதியில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கழுத்தறுபட்டு வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துளசிராம் (64), அவரது மனைவி கிரண் (60), மகள் நிகாரிகா (30) மற்றும் மருமகள் பிரியங்கா (25) ஆகியோர் தான் கழுத்தறுபட்டு உயிரிழந்து கிடந்தனர்.

துளசிராம் என்பவர் எலெக்ட்ரானிக் கடை நடத்தி வரும் நிலையில் நேற்று மதியம் அவரது மகன் ஆதிஷ் வெளியில் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு திரும்பிய நிலையில் தனது தந்தை, தாய், சகோதரி மற்றும் மனைவி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு கதறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர, பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த கொலைக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில் ஆதிஷ் காசு கொடுத்து ஆட்களை வைத்து தனது குடும்பத்தினரை கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. வீட்டின் அருகிலுள்ள சிசிடிவியை பரிசோதித்த போது இதற்கான துப்பு கிடைத்தது. ஆதிஷின் நண்பன் ஒருவரின் உதவியுடன் மேலும் இரண்டு பேரை ஏற்பாடு செய்து கொலைக்கான திட்டத்தை ஆதிஷ் தீட்டியுள்ளார். பின்னர் வீட்டில் வந்து குடும்பத்தினரை பிரிந்து தவிப்பது போல நாடகமாடியது அம்பலமானது.

முன்னதாக ஆதிஷிற்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவரது வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அனைவரும் தனது உறவிற்கு இடையூறு செய்ததால் குடும்பத்தினரை தீர்த்துக் கட்ட ஆதிஷ் முடிவு செய்த பயங்கரமான பின்னணி தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ஆதிஷ் மற்றும் அவரது நண்பர் அனூப் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். தனது கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த குடும்பத்தினரையே வாலிபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்