கல்யாணம் முடிஞ்சதும் இந்த சர்டிபிகேட் கொடுக்கணும்.. அதிர்வலையை ஏற்படுத்திய ‘வரதட்சணை கொடுமை’ விவகாரம்.. கேரள அரசு அதிரடி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண்கள் அடுத்து தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண்கள் சிலர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டது, அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பெண்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வரதட்சணை கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பினர். மேலும் வரதட்சணை தடை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் வரதட்சணை தடை சட்டத்தில் கேரள அரசு திருத்தம் செய்துள்ளது. அந்த வகையில் அம்மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பின் வரதட்சணை பெறவில்லை என உறுதி அளித்த சான்றிதழை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் அனுபாமா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கேரள அரசின் கீழ் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் தாங்கள் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் வரதட்சணை கேட்கவோ, வாங்கவோ, வற்புறுத்தவோ இல்லை என்பதை குறிப்பிட்டு கையெழுத்திட்ட சான்றிதழை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த படிவத்தில் அரசு ஊழியர், ஊழியரின் தந்தை, ஊழியரின் மனைவி, மாமனார் உள்ளிட்டோர் கையெழுத்திட வேண்டும். இந்த படிவங்களை அந்தந்த துறை தலைமை அதிகாரிகள், அவர்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் இருந்து பெற்று வருடத்திற்கு இரண்டு முறை (ஏப்ரல், அக்டோபர்) சம்மந்தப்பட்ட மாவட்ட வரதட்சணை தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரதட்சணை கொடுப்பதோ, பெறுவதோ சிறை தண்டனைகுரிய குற்றமாகும். இதற்கான சிறை தண்டனை 5 வருடத்திற்கு குறையாமல் இருக்கும் என்றும், ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அல்லது வரதட்சணைக்கு ஏற்ப அபராதம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறிய அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ‘வரதட்சணை தடை சட்டத்தை அமல்படுத்தும் அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள், வரதட்சணை தடை சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளாக செயல்படுவார்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் அமலில் உள்ள வரதட்சணை தடை சட்டம் 1961-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். திருமண பந்தத்தின் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு சொத்தாகவோ அல்லது மதிப்பு மிக்க பாதுகாப்பு பத்திரமாக கொடுப்பதும் அல்லது கொடுப்பதாக ஒப்புக் கொள்வதும் சட்டப்படி தவறு என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்