'இதுக்காகவா கல்யாணத்தை நிறுத்துற, வேண்டாம்மா ரொம்ப தப்பு'... 'பிடிவாதம் பிடித்த மணப்பெண், பரிதாபமாக நின்ற மாப்பிள்ளை'... காரணத்தை கேட்டு நொந்துபோன பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூட பல திருமணங்கள் நடக்காமல் நின்றுள்ளது. ஆனால் கல்யாணத்தை நிறுத்த மணப்பெண் இப்படி ஒரு காரணத்தைச் சொல்வார் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாளில் மாப்பிள்ளை தனது உறவினர்களுடன் ஊர்வலமாகத் திருமண மண்டபத்துக்கு வந்தடைந்தார்.

அப்போது மணப்பெண், திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மாப்பிள்ளையிடம் வந்து பேசியுள்ளார். அப்போது மாப்பிள்ளையின் கல்வித் தகுதியைச் சோதித்து பார்க்கலாம் என மணப்பெண்ணுக்குத் தோன்றியுள்ளது. இதையடுத்து மாப்பிள்ளையிடம் 2ம் வாய்ப்பாட்டைக் கூறுங்கள் எனக் கேட்டுள்ளார்.

மணப்பெண் விளையாட்டாகத் தானே கேட்கிறார் என நினைத்துக் கொண்டு, மாப்பிள்ளை இரண்டாம் வாய்ப்பாட்டைக் கூற முயல அவரால் சரியாக வாய்ப்பாட்டைச் சொல்ல முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மணப்பெண், சாதாரண கணக்கு கூட தெரியாத ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று திருமணத்தை நிறுத்தும்படி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். 

இதனைக் கேட்ட புதுமாப்பிள்ளை என்ன சொல்வது எனத் தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார். மணப்பெண்ணின் பெற்றோர் அவரை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். இதெல்லாம் ஒரு காரணம் கிடையாது. இது மிகவும் தவறு என எவ்வளவோ எடுத்துக் கூறினார்கள். ஆனால் படிப்பறிவு இல்லாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அதே நேரத்தில் பெற்றோர் சமாதானம் செய்த நிலையில் அங்கிருந்த உறவினர்கள் சிலர், நீ சொல்வது சரி தான் உன்னுடைய முடிவு சரியானது என மணப்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு மணிமேடைக்கு வந்த நேரத்தில் இப்படி ஒரு காரணத்தைச் சொல்லலாமா என மணமகனின் உறவினர்கள் தங்களது ஆதங்கத்தைக் கொட்டினார்கள்.

ஆனால் மணப்பெண் உறுதியாக இருந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டதாக இரு வீட்டாரும் அறிவித்தனர். ஆனால் மணமகனின் நிலை தான் பரிதாபமாகப் போக, உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். முன்னதாக மாப்பிள்ளையின் கல்வி தகுதி குறித்து பெண்ணின் பெற்றோர் அவரிடம் மறைத்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மற்ற செய்திகள்