'கொரோனாவா அப்படின்னா???'... 'இதுவரைக்கும் ஒருத்தருக்குகூட பாதிப்பில்ல!!!'... 'மாஸ்க், சானிடைசர்னு எதுவுமே கிடையாது!!!'... 'இந்தியாவுல இன்னும் இப்படி ஒரு இடமா?!!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதால் லட்சத்தீவுகளில் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படாத நிலை தொடர்ந்து வருகிறது.

உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் திணறி ஒருவழியாக தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில் எந்தவித கட்டுப்பாடுளும் இன்றி இயல்பு வாழ்க்கை தொடர்ந்து வருகிறது. முக கவசங்கள், கிருமி நாசினிகள் இல்லாமல் உணவகங்கள், சுற்றுலா தலங்கள், பள்ளி, கல்லுாரிகள் என வழக்கம் போல அங்கு அனைத்துமே இயங்கி வருகின்றன. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விருந்தினர் எண்ணிக்கைக்கு கூட அங்கு கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது.

லட்சத்தீவுகளில் ஒருவர் கூட கொரோனாவால் இதுவரை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம் கடைப்பிடிக்கும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம் என கூறப்படுகிறது. இது குறித்துப் பேசியுள்ள லட்சத்தீவுகள் லோக்சபா எம்பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான முகமது பைசல், "கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குறித்த தகவல் கடந்த ஜனவரியில் வெளியான உடனேயே இங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சத்தீவுகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

அதன்பிறகு பொது மக்கள் முதல், அரசு அதிகாரிகள் வரை யாராக இருந்தாலும், லட்சத்தீவுகளுக்குள் வர வேண்டுமானால், கேரளாவின் கொச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏழு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே கப்பல் அல்லது ஹெலிகாப்டர் வாயிலாக தலைநகர் கவரட்டிக்கு அழைத்து வரப்படுவார்கள். பின்னர் அங்கு மீண்டும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யப்பட்ட பின்பே, ஊருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நான் இதுவரை மூன்று முறை டில்லி சென்று வந்தபோதும், ஒவ்வொரு முறையும் இந்த நடைமுறைகளை பின்பற்றியே சென்று வந்துள்ளேன். இவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருப்பதாலேயே இங்கு ஒருவருக்கு கூட இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்