'பைக்கில் சென்ற இளைஞர்கள்'...'திடீரென பதுங்கிப் பாய்ந்த 'சிறுத்தை'...உதறல் எடுக்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பைக்கில் சென்ற இளைஞர்கள் இருவரை சிறுத்தை ஒன்று பாய்ந்து தாக்க வந்த வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று காண்போருக்கு கிலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ''காடுகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்'' என்ற கேப்ஷனுடன் அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ''சாலையில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனத்தில் இருப்பவர்கள் ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அப்போது சாலையின் ஓரத்தில் இருக்கும் புதரில் ஒரு சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்தது. அந்த சிறுத்தை சாலையை கடந்து சென்ற பிறகு செல்லலாம் என அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

அப்போது திடீரென சிறுத்தை தன்னை அந்த புதருக்குள் மறைக்க தொடங்கியது. அந்த நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை கடந்து, இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சென்றது. அதில் இரு இளைஞர்கள் இருந்தனர். அதை கவனித்த சிறுத்தை அந்த இளைஞர்களைக் குறிவைத்துப் பாய்ந்தது. ஆனால் நூலிழையில் இளைஞர்கள் இருவரும் தப்பினர்.உடனே அந்த இருசக்கர வாகனம் வேகமாக சென்றது''.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நந்தா தனது பதிவில் '' காடுகளை நாம் மதிக்க கற்று கொள்ள வேண்டும். வனத்தின் உண்மையான உரிமையாளரான சிறுத்தைக்கு வழி விட அனைவரும் காத்திருந்தனர்.

ஆனால் இரு சக்கரவாகனத்தில் பயணித்தவர் தனது வழியில் பயணிக்க விரும்பினார். அதுவே அவரது கடைசி பயணமாக இருந்திருக்கும்'' என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வயநாட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவரை புலி ஒன்று துரத்திய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

TWITTER, LEOPARD, POUNCES, BIKERS, SUSANTA NANDA IFS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்