'நான் கொஞ்சம் கிள்ளி பாத்துக்கிறேன்'... 'மறுபிறவி எடுத்து வந்த டிரைவர்'... 'ஆனந்த கண்ணீரில் மனைவி'... கேரள தொழிலதிபர் கொடுத்த ஒரு கோடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அபுதாபியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள டிரைவர், தொழிலதிபரின் உதவியால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்.

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த இரிஞ்ஞாலக்குடா பகுதியைச் சேர்ந்தவர் பெக்ஸ் கிருஷ்ணன். 45 வயதான இவர் அபுதாபியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு பெக்ஸ் கிருஷ்ணன் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் சூடான் நாட்டை சேர்ந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுதொடர்பான வழக்கில் அபுதாபி கோர்ட்டு பெக்ஸ் கிருஷ்ணனுக்கு மரண தண்டனை விதித்தது. அபுதாபி நாட்டுச் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கினால் தண்டனையிலிருந்து விடுபடலாம் என்ற விதி உள்ளது. இதையடுத்து உயிரிழந்த சூடான் சிறுவனின் பெற்றோரிடம் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரும், லுலு குழுமத் தலைவருமான யூசுப் அலி தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க முன் வந்தார்.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் கூறியதைத் தொடர்ந்து பெக்ஸ் கிருஷ்ணனை அபுதாபி கோர்ட்டு விடுதலை செய்தது. இதனால் மறுபிறவி எடுத்த பெக்ஸ் கிருஷ்ணன் இந்தியாவுக்குத் திரும்புவதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார். இந்த நிலையில் விடுதலையான பெக்ஸ் கிருஷ்ணன் அபுதாபியிலிருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை 1.45 மணிக்குக் கொச்சி விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் அவரை வரவேற்க மனைவி வீணா, மகன் அத்வைத் ஆகியோர் இருந்தனர். 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய தந்தையைக் கண்டதும் அத்வைத் அவரது கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார். மனைவியும் ஆனந்தக் கண்ணீர் வடித்து அவரை கட்டி தழுவினார். இது கனவா அல்லது நிஜமா என பெக்ஸ் கிருஷ்ணனின் மனைவி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மற்ற செய்திகள்