'சின்ன வயசுல இருந்து லவ்'... 'அம்மா, அப்பா ஒகே'...'ஆனா 3 தடவ நின்ற கல்யாணம்'...போராடும் காதலர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இருவீட்டாரின் சம்மதம் இருந்தும் 3 முறை திருமணம் நின்ற நிலையில், தற்போது கொரோனாவால் இளம் காதலர்களின் திருமணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் இரன்கிபலன் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் பிரேம் சந்திரன் மற்றும் சந்திரா சந்தோஷ். சிறு வயது முதலே இருவரும் பழகி வந்த நிலையில், இளம் வயதில் இருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில் திருமண வயது வந்ததும், இருவரும் தங்களது காதல் குறித்து இரு வீட்டிலும் தெரியப்படுத்த அவர்களுக்கும் காதலுக்கு பச்சை கொடி காட்டியுள்ளார்கள்.

இதையடுத்து, பெற்றோரின் சம்மதத்துடன் பிரேம் மற்றும் சந்திராவுக்கு 2018-ம் ஆண்டு மே 20-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அந்த நேரம் பார்த்து கேரளாவில் நிபா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சூழ்நிலையில் நிபா வைரஸ் காரணமாக மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டதால் 2018 மே 20-ம் தேதி நடைபெறவிருந்த திருமணம் முதல்முறையாக தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் நிபா வைரஸின் தாக்கம் ஒரு வழியாக குறைந்த நிலையில், அதற்கு அடுத்த மதமே இருவரின் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்தார்கள்.

அந்த நேரம் பார்த்து குடும்பத்தில் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்ததால் பிரேம்-சந்திரா திருமணம் மீண்டும் தடைபட்டது.    இதைத்தொடர்ந்து, இருமுறை தடைபட்ட திருமணத்தை கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையின் போது மீண்டும் நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர். திருமணம் நடைபெற போகிறது என மகிழ்ச்சியில் இருந்த இளம் காதலர்களுக்கு கேரளாவில் கொட்டிய மழை பேரதிர்ச்சியை கொடுத்தது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் கேரளாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக காதலர்களின் திருமணம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் திருமண முயற்சியை கைவிடாத பிரேம்-சந்திரா ஜோடி இந்த ஆண்டு மார்ச் 20-ம் தேதி (நேற்று) தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில்,  தற்போது இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் காரணமாக மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கூட்டமாக கூட தடைவிதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று நடைபெறவிருந்த இவர்களின் திருமணம் மூன்றாவது முறையாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. திருமணம் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்தாலும், பிரேம்-சந்திரா தம்பதிகளின் திருமணம் நிச்சயமாக நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

KERALA, KERALAFLOOD, CORNAVIRUS, YOUNG COUPLE, WEDDING, NIPAH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்