‘இனியும் வெயிட் பண்ணக்கூடாது’!.. ரிஸ்க் எடுத்த இரண்டு தன்னார்வலர்கள்.. கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிய கொரோனா நோயாளியை, தன்னார்வலர்கள் பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கென்று, அம்மாநில அரசு சார்பில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மையமான ஆலப்புழாவின் வட புனப்பாரா மையத்தில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவருக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அங்கு மருத்துவ உதவியாளர்களோ, வெண்டிலேட்டர் வசதியோ இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் இரவு முழுவதும் மூச்சுத்திணறலால் அவர் சிரமப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தன்னார்வலர்களான அஸ்வின் மற்றும் ரேகா, காலையில் அங்கு சாப்பாடு கொடுக்கச் சென்றுள்ளனர். அப்போது மூச்சுத்திணறலால் சிரமப்பட்டுள்ள  நோயாளி ஒருவர், உயிருக்கு ஆபத்த நிலையில் இருப்பது குறித்து தெரியவந்துள்ளது. இதைப்பார்த்த அஸ்வின் மற்றும் ரேகா, இனியும் தாமதம் செய்யக்கூடாது என இருவரும் பாதுகாப்பு உடையணிந்து, நோயாளியை பைக்கில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அஸ்வின் பைக் ஓட்டிச்செல்ல, ரேகா பின்னால் அமர்ந்து அந்த நபர் கீழே விழுந்துவிடாமல் பிடித்துக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அஸ்வின், ‘நாங்கள் சாப்பாடு கொடுக்க சென்றபோது, அங்கிருந்தவர்கள், நோயாளி ஒருவர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்கள். பாதிக்கப்பட்ட அந்த நபர் மூன்றாவது மாடியில் இருந்தார். நாங்கள் சென்று பார்த்தபோது, மிகவும் மோசமான நிலையில் அவர் இருந்தார். இதனால் உடனே ஆம்புலன்ஸூக்கு ஃபோன் செய்து பார்த்தோம். கிட்டத்தட்ட மூன்று ஆம்புலன்ஸ் சேவைகள், வர முடியாத சூழலில் தாங்கள் இருப்பதாக சொல்லிவிட்டனர். அதனால் அவரை பைக்கில் அழைத்துச்சென்றோம்’ என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ரேகா, ‘மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவரை பார்த்துக்கொள்ளவோ, அவருடன் மருத்துவமனைக்கு வருவதற்கோ யாரும் முன்வரவில்லை. அதனால்தான் நானே பின்னால் அமர்ந்து சென்றேன். ஒருவேளை ஆம்புலன்ஸூக்காக காத்திருந்தால், இன்று அவரின் உயிர் கேள்விக்குறியாகி இருக்கும். நல்லவேளை நாங்கள் அந்த ரிஸ்கை எடுக்கவில்லை. நாங்கள் சென்ற பைக் கூட அங்கு தங்கியிருந்த ஒருவருடையதுதான்’ என அவர் கூறினார்.

தன்னார்வலர்களான அஸ்வினும், ரேகாவும் நோயாளியை பைக்கில்  அழைத்து செல்லும் புகைப்படம் தொலைக்காட்சிகளில் வெளியானதை அடுத்து, அந்த மையம் பற்றி ஆய்வுசெய்ய மருத்துவக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றி உயிரைக் காப்பாற்றிய அஸ்வின் மற்றும் ரேகாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

News Credits: The Indian Express

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்