'எப்படியும் உன் கல்யாணத்தை நடத்திருவேன் மா'... 'தைரியமா இரு'... மகளுக்காக வேற லெவலில் யோசித்த தந்தை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண்ணின் திருமணம் தடைப்படக் கூடாது என்பதற்காகப் பெண்ணின் தந்தை செய்த செயல் பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் தகழியைச் சேர்ந்த ஆதிராவுக்கும், செங்கனூரைச் சேர்ந்த அகிலுக்கும் கடந்த மாதம் 23-ந் தேதி ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாகக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் திருமணத்தை இருவீட்டாரும் கலந்து பேசி தள்ளி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மணமகளின் இல்லத்தில் எளிமையாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் ஒரு இடைஞ்சல் வந்தது. அங்குப் பெய்த கனமழை காரணமாக மணப்பெண்ணின் வீட்டில் தண்ணீர் புகுந்து திருமணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் திருமணம் தடைப்படுகிறதே என மணப்பெண் சோகத்தில் ஆழ்ந்தார்.

இதையடுத்து மகளுக்குத் தைரியம் சொன்ன ஆதிராவின் தந்தை, திருமணத்தை மீண்டும் தள்ளிப் போட விரும்பவில்லை. இதையடுத்து திருமணத்தை நடத்த வேற வழியில் யோசித்தார். அதற்குப் படகைத் திருமண மேடையாக மாற்ற முடிவெடுத்தார். இதற்காக ஒரு பெரிய படகை 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து, அதில் திருமணத்தை நடத்தலாம் என மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவித்தார் அதற்கு அவர்களும் ஒத்துக் கொண்டனர்.

அதன்படி நேற்று முன்தினம் மிதக்கும் படகு முழுவதும் பூக்கள் கட்டி மணிமேடையாக அலங்கரிக்கப்பட்டது. மணமக்கள் படகில் அமர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்டு பங்கேற்றனர். படகில் நடந்த திருமணம் வித்தியாசமான அனுபவம் என மணமக்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் மகளின் திருமணம் நின்று விடக் கூடாது என்பதற்காக மாற்றி யோசித்த மணமகளின் தந்தையைப் பலரும் வெகுவாக பாராட்டினார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்