'வயசு தான் 50'... 'ஆனா பிட்னெஸ் வேற லெவல்'... 'மீனவர்களுடன் கடலில் குதித்த ராகுல்'... 'பதற்றமான அதிகாரிகள்'... படகில் நடந்த சுவாரசியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

50 வயதாகும் ராகுல்காந்தி, தான் சூப்பர் பிட் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

கேரளாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்குள்ள மீனவர்களைச் சந்தித்து அவர்களோடு உரையாடினார். பின்னர் கடலில் அவர்கள் சென்று மீன் பிடித்து வருவது என்பது சாதாரண ஒன்று அல்ல என்பதை உணர்ந்த அவர், அதை நேரில் காண முடிவு செய்தார். இதனால் தனது பயணத் திட்டத்தை ரகசியமாகவும் வைத்திருந்தார்.

இதற்காக, கொல்லம் சென்ற அவர் தேசியப் பாதுகாப்புப் படையினரிடம் கூட தகவல் சொல்லவில்லை. இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகளை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டு நேற்று அதிகாலை 5.15 மணிக்கு ரகசியமாகக் கொல்லம் துறைமுகத்துக்குச் சென்றார் ராகுல் காந்தி. தொடர்ந்து, படகில் கடலுக்குள் பயணித்த ராகுல் காந்தி மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்தார்.

பின்னர், மீனவர் ஒருவர் கடலுக்குள் குதிக்க, அதனைப் பார்த்துக் கொண்டிருந்த  ராகுலும் கடலில் குதித்து உற்சாகமாக நீந்தத் தொடங்கினார். ராகுல் கடலுக்குள் குதித்ததைப் பார்த்த உடனிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் பிரதாபன் பதறிப் போனார். ஆனால் ராகுலின் தனி பாதுகாப்பு அதிகாரியான அலங்கார் சாமியோ,' ராகுல் காந்தி தேர்ந்த ஸ்விம்மர். நீங்கள் கவலைப் படாதீர்கள்' என்று பிரதாபனை அமைதிப் படுத்தினார்.

அதே நேரத்தில் குளம், ஆறுகளில் நீந்துவது போல, கடலில் நீந்திவிட முடியாது. எழும் அலைகளைச் சமாளித்து லாவகமாக நீந்த வேண்டும். பல சமயங்களில் மீனவர்களே கடலில் மூழ்கி விடுவது உண்டு. ஆனால், ராகுல்காந்தி தேர்ந்த நீச்சல் வீரர் போல கடலில் நீந்தியது மீனவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதற்கு ராகுல் காந்திக்கு நீச்சல் தெரிந்தது மட்டுமல்லாது, அவரது உடல் வலிமையும் முக்கிய காரணம் ஆகும்.

தற்போது, 50 வயதாகும் ராகுல்காந்தி, ஜீன்ஸ், டீ சர்ட் போட்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஆனால் அவரை பார்த்தால் நிச்சயம் 50 வயது மனிதர் மாதிரி தெரியாது. அதற்கு முக்கிய காரணம் ராகுல் காந்தி தனது உடல் நலனில் எடுத்து கொள்ளும் அக்கறை தான். தினமும் 12 கிலோ மீட்டர் ஜாக்கிங் செல்வது ராகுல் காந்தியின் பழக்கம். உடற்பயிற்சிகளுடன் தியானம், யோகா செய்வதும் அவரின் பிட்னெஸ் ரகசியமாகும்.

இதற்கிடையே கடலுக்குள் நடக்கும் விஷயங்களை ராகுலுடன் இருந்த இரு போலீஸ் அதிகாரிகளும் கொல்லம் கமிஷனர் டி. நாராயணனுக்கு வயர்லெஸ்ஸில் தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.  ராகுல் கடலுக்குள் நீச்சல் அடிக்கும் தகவலைக் கேட்ட டி. நாராயணன் சற்று அதிர்ந்து தான் போனார். இதையடுத்து கமிஷனர் நாராயணன் கடலோர பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்க அவர்களும் படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

கடலில் 10 நிமிடங்கள் நீந்திய ராகுல் காந்தி பின்னர், படகில் ஏறினார். ஏற்கனவே , படகில் சமைத்துத் தயாராக இருந்த டுனா மீன் குழம்பை மீனவர்கள் அவருக்குப் பரிமாறினர். ரொட்டியுடன் சேர்த்து டுனா மீன் குழம்பை ராகுல்காந்தி ருசித்துச் சாப்பிட்டார். தொடர்ந்து, மீனவர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். கடலுக்குள் இரண்டரை மணி நேரம் இருந்த ராகுல் காந்தி புது உற்சாகத்துடன் கரை திரும்பினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்