‘காவலர்களை தடுத்து நிறுத்தி’... 'இளைஞர் செய்த துணிகர சம்பவம்'... வைரலான வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காவல்துறை வாகனத்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநர் மற்றும் உடனிருந்த அதிகாரியை சீட் பெல்ட் அணிய வைத்த இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

ஆகஸ்ட் 15 முதல் போக்குவரத்து விதிகள் மாற்றப்பட்டு, விதிகளையும் மீறுவோருக்கு அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் கார் ஓட்டுவோர் சீட் பெல்ட் கண்டிப்பாக அணிய வேண்டும் என்ற விதி கடைப்பிடிக்கப்படுகிறது. சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆலப்புழா நகரத்தில், சீட் பெல்ட் அணியாமல் காவல் துறை வாகனத்தில் இருவர் சென்றனர்.

இதனைக் கண்ட இளைஞர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் அவர்களை துரத்திச் சென்றார். அப்போது அவர்களை சீட் பெல்ட் அணியுமாறு வலியுறுத்தினார். இதனை வீடியோவாக அவர் பதிவுசெய்துக்கொண்டிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார். இருப்பினும் இளைஞரின் கோரிக்கையை பொருட்படுத்தாது காவல்துறையைச் சேர்ந்த அவர்கள் சீட் பெல்ட் அணியாமல் வண்டி ஓட்டிச் சென்றனர். பின்னர் அவர்களை முந்திச் சென்று, போலீஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி, அவர்களை சீட் பெல்ட் அணிய வைத்தார்.

இதுகுறித்து ஆழப்புழா நகர காவல்நிலையத்திற்கு தெரியவந்தாலும், இதுகுறித்து ஒருவரும் புகார் செய்யவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தைரியமாக செயல்பட்ட இளைஞருக்கு பாராட்டு குவிகிறது.  எனினும் காவல்துறை அதிகாரிகளிடம் இவ்வாறு நடந்துக்கொண்டது தவறு என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

 

KERALA, VIRALVIDEO, YOUTH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்