'வைரலான ரொமாண்ட்டிக் போட்டோ ஷூட்'... 'அர்ச்சனை செய்த நெட்டிசன்கள்'... 'இந்த கேள்வி எல்லாமா கேப்பீங்க'... தம்பதியர் சொன்ன பஞ்ச் பதில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட கேரள தம்பதியின் போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்குச் சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அது குறித்து அந்த தம்பதியர் அதிரடியாகப் பதிலளித்துள்ளார்கள்.

திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் திருமணத்திற்கு முன்பும், திருமணம் செய்து கொண்ட பின்னும் போட்டோ ஷூட் செய்து கொள்வது என்பது தற்போது பரவலாகக் காணப்படுகிறது. அந்த வகையில் சில நேரங்களில் எடுக்கப்படும் போட்டோ ஷூட்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கம். அந்த வகையில் திருமணத்திற்குப் பின்னர் பெண் ஒருவர் உடலில் வெள்ளை போர்வைபோல் மெலிதான உடையை அணிந்துகொண்டு தேயிலைத்தோட்டங்களில் கணவருடன் ஓடியாடும் ரொமாண்ட்டிக் போட்டோ ஷூட் சமூகவலைத்தளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியது.

இதைக் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்த நெட்டிசன்கள், கணவனிடம் மட்டும் இருக்கும் நெருக்கத்தை இப்படியா பொது வெளியில் காட்டுவது எனக் கடுமையாகப் பதிவிட்டு வருகிறார்கள். கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட,இத்தம்பதி கொரோனா காரணமாகத் திருமணத்திற்கு முந்தைய ஃப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டை செய்துகொள்ள முடியாததால், திருமணத்தை முடித்தபிறகு எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டார்கள். 

கடந்த வாரம் இடுக்கி மாவட்டத்தின் வாகமனில் தேனிலவைக் கொண்டாடியவர்கள், தங்கள் நண்பர் அகில் கார்த்திகேயனின் உதவியுடன்தான் இந்த வைரல் போட்டோஷூட்டை செய்துள்ளனர். இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தம்பதியரின் போட்டோ ஷூட் கடும் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், இந்த சர்ச்சை குறித்து மணமகன் ஹிருஷி கார்த்திகேயன் தி நியூஸ் மினிட் இணையத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், ''பெரும்பாலான தம்பதிகள் தங்கள் போட்டோ ஷூட்களீல் பாரம்பரியமான வேஷ்டி சேலை அணிந்தே கோயிலைச் சுற்றி நடக்கிறார்கள்.

ஆனால், நாங்கள் வித்தியாசமாக ஏதாவது வித்தியாசமாகச் செய்ய விரும்பினோம். அதனால்தான், இப்படியொரு போட்டோ ஷூட் செய்தோம். ஆனால் நாங்கள் ஆடை அணிந்து கொண்டு தான் போட்டோ ஷூட் செய்தோம். இந்த போட்டோ ஷூட் முழுக்க முழுக்க எங்கள் புகைப்படக்காரரின் அழகியல் மற்றும் படைப்பாற்றல் திறமை சார்ந்தது. ஆனால் இது எதையும் தெரியாமல் பேஸ்புக்கில் பலர் என்னையும் என் மனைவியையும் கடுமையான வார்த்தைகளால் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

கேரளாவில் ஒரு பெண் சேலை தவிர வேறு எதையும் அணிந்தால் ஆண்களின் பார்வை மாறிவிடுகிறது. அதே நேரத்தில் எங்கள் வீட்டில் இந்த போட்டோ ஷூடிற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் மனைவியின் வீட்டில் வருத்தப்பட்டார்கள்'' எனக் கூறியுள்ளார். இதற்கிடையே சர்ச்சைகளுக்குப் பதிலளித்த மணப்பெண் லட்சுமி, ''நாங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்தவுடன் பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்தார்கள். முதலில் சிலருக்குப் பதில் சொன்னோம்.

ஆனால் பலர் கடுமையான வார்த்தைகளை எங்கள் மேல் திணித்தார்கள். இதனால் அந்த விமர்சனங்களை நாங்கள் புறக்கணிக்க ஆரம்பித்தோம். அந்த நேரம் எனது தூரத்து உறவினர்களும் பக்கத்துவீட்டுக் காரர்களும் எனது பெற்றோரிடம் இதனையெல்லாம் புகாராகக் கூறிவிட்டார்கள். நான்கு சுவர்களுக்குள் செய்ய வேண்டியதை இப்படி பொது வெளியில் செய்யலாமா, நீங்கள் ஆடை அணிந்து இருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்டார்கள்.

வாகமன் போன்ற சுற்றுலா தளத்தில் போட்டோ ஷூட் செய்யும்போது எப்படி ஆடை அணியாமல் செய்ய முடியும். எங்களைத் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பவர்களுக்கு எங்களின் ஒரே பதில், அது எங்கள் புகைப்படங்கள், அது எங்களின் விருப்பம் சார்ந்தவை, எனவே இவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலளித்து என்னுடைய எனர்ஜியை வீணாக்க விரும்பவில்லை'' என நச்சென பதிலளித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்