‘தம்பிய பார்த்துக்க சொல்லிவிட்டு சென்ற தாய்’... ‘சிறிது நேரத்தில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்’... 'பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டியம் பள்ளிமன் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார். இவர் அரபு நாட்டில் பணிபுரிந்து  வரும்நிலையில், இவரது மனைவி தன்யா மற்றும் குழந்தைகளுடன் கொல்லம் இத்திகாரா ஆற்றின் கரையோரத்தில் வசித்து வந்தனர். இந்தத் தம்பதியின் 6 வயது மகள் தேவநந்தா ஒன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளி ஆண்டுவிழா விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார்.  அப்போது காலை அவரது தாய் தன்யா, பின்புறம் துணி துவைக்க சென்றபோது, பின்னாலேயே வந்த மகள் தேவநந்தாவை, தூங்கிக் கொண்டிருந்த 3 மாத தம்பியை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

மகள் வீட்டுக்குள் செல்வதைப் பார்த்த தாய், 15 நிமிடங்கள் கழித்து வந்து பார்த்தபோது தேவநந்தாவை காணாததால் அதிர்ச்சியடைந்தார். கதவும் திறந்து கிடந்துள்ளது. பின்னர் எங்கே தேடியும் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் மகளின் புகைப்படத்தை வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என பதிவிட்டு மாயமான செய்தியும் வெளியிட்டார். இந்நிலையில், இவர்களது வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆறு உள்ளது. ஒருவேளை சிறுமி ஆற்றில் தவறி விழுந்திக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட, போலீசார் மீட்புப் பணியில் இறங்கினர்.

ஆனால் இரவு நேரம் ஆகியும் சிறுமி கிடைக்கவில்லை. இதற்கிடையில் தகவல் தெரிந்து தேவநந்தாவின் தந்தை வெளிநாட்டில் இருந்து திரும்பினார். சிறுமி எப்படியும் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் உறங்கச் சென்ற கேரள மக்களுக்கு வெள்ளிக்கிழமை விடியல் மோசமானதாக இருந்தது. அதிகாலையில் சிறுமியின் உடல் ஆற்றில் மிதப்பதை அருகிலிருந்தவர்கள் பார்த்துள்ளனர். தன்யாவின் வீட்டிலிருந்து 600 மீட்டர் தொலைவில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மகள் இறந்து இருந்ததைக் கண்டு பெற்றோர் கதறி அழுதனர். உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து, அவரது உடல் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சிறுமியின் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் போலீசில் புகார் செய்தனர். சிறுமி தனியாக ஆற்றுக்கு நடந்து செல்ல வாய்ப்பு இல்லாததால், யாராவது அவரை கடத்தி ஆற்றில் வீசியிருக்கலாம் என்றும் கூறினர். இந்நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சுவாசக்குழாயில் சேறும் மண்ணும் இருந்துள்ளது.

தடயவியல் சோதனையிலும் அவரது உடலில் காயங்கள் எதும் இருந்ததாகக் கூறப்படவில்லை. மேலும் காணாமல் போன அன்று உடுத்தியிருந்த உடையுடன் அருகில் அவரது தாயின் துப்பட்டாவும் கிடைத்துள்ளது. எனவே, சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை அதை உறுதிசெய்துள்ளது. இதையடுத்து சிறுமியின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது சொந்த ஊரான கொல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்