'ஆண்டவா, எங்களுக்கும் இப்படி ஒரு பேஸ்புக் பிரண்ட் கிடைக்கமாட்டாரா'... 'முகநூல் நண்பரை சந்திக்க வந்த குடும்பம்'... திரும்பி போகும்போது கோடீஸ்வரனாக போன ருசிகரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முகநூல் நண்பரை குடும்பத்துடன் சந்திக்க வந்தவருக்கு இப்படி ஒரு ஜாக்பாட் அடிக்கும் என அவர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

கேரள மாநிலம் புத்தலத்தானி பரவன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பேஸ்புக் மூலம் பலரிடம் நட்பாகப் பழகி வந்துள்ளார். அந்த வகையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சோகன் ஹல்ராம் என்பவருடன் பிரபாகரனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகிய நிலையில், நட்பு காரணமாகத் தனது ஊருக்கு வருமாறு சோகனை பிரபாகரன் அழைத்துள்ளார்.

அதன்படி சோகன் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கேரளா வந்து பிரபாகரனின் வீட்டில் தங்கினார். பின்னர் கேரளாவில் உள்ள பல்வேறு சுற்றலா தலங்களுக்கு இரு குடும்பத்தினரும் சென்று இனிமையாகப் பொழுதைக் கழித்தனர். அப்போது இருவரும் தாங்கள் செய்து வரும் தொழில் குறித்து மனம் விட்டுப் பேசினர். எதிர்காலத்தில் தொழிலை எப்படி எல்லாம் கொண்டு செல்லலாம் எனவும் பேசினார்கள்.

அப்போது பிரபாகரன் தனது லாட்டரி ஏஜென்சி தொழில் குறித்துக் கூறியுள்ளார். அதோடு கேரளா லாட்டரியில் பம்பர் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படும் தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து பிரபாகரன் மூலமாக 5 பேருக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கக்கூடிய லாட்டரி சீட்டை சோகன் ஹல்ராம் வாங்கினார். இதையடுத்து சோகன் தனது குடும்பத்தினருடன் கர்நாடகா செல்ல தயாரானார்.

பிரபாகரன் குடும்பத்தினர் அவர்களை மகிழ்ச்சியாக வழியனுப்பி வைத்தனர். இந்த சூழ்நிலையில் சோகன் வாங்கிய லாட்டுச்சீட்டுக்கு ரூ.1 கோடி விழுந்தது. இது குறித்து அவருக்குப் பிரபாகரன் தகவல் தெரிவித்தார். ஆனால் இதை நம்ப முடியாமல் சோகன் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார். உடனே அவர்களைத் திரும்ப வருமாறு பிரபாகரன் அழைத்த நிலையில், சோகன் குடும்பத்தினர் பிரபாகரனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

முகநூல் மூலம் கிடைத்த நட்பின் காரணமாக இன்று சோகன் கோடீஸ்வரனாக மாறியுள்ள நிலையில், அதற்கு சோகன் குடும்பத்தினர், பிரபாகரனுக்கு மனமார நன்றியினை தெரிவித்தார்கள். இதற்கிடையே இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும், எங்களுக்கு இப்படி ஒரு முகநூல் நண்பர் இல்லையே எனச் சற்று கிண்டலாக தங்களின் ஆதங்கத்தைக் கொட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்